இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Wednesday 9 May, 2007

தில்லுமுள்ளுகளும் தள்ளுமுள்ளுகளும்-1

ல்லோருக்கும் வணக்கமுங்க, பாரதி பாரதி பாரதி... அப்படின்னு என்ன திடீர்ன்னு பாரதி புராணம் பாட வந்துட்டானுங்க இவனுங்கன்னு நீங்களெல்லாம் கேட்கிறது எங்கள் காதுகளுக்கு கேட்காமல் இல்லிங்க. அதை பற்றித்தான் இப்போ இங்க பேச வந்திருக்குறோமுங்க. இந்த வருஷம் நம்ம பாரதியின் 125வது பிறந்த ஆண்டானபடியால், அவருக்கு அவங்கவுங்களுக்கு தகுந்த மாதிரி பல மாதிரி விழாக்கள் எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதுல பாருங்க நாங்களும் பிரான்சில பாரதிக்கு ஒரு விழா எடுத்துப் புடனமுன்னு பிரான்ஸ் தமிழ் சங்கம் முதல்ல ஒரு விளம்பரம் செய்தாங்க. பிரான்ஸ் தமிழ் சங்கம் அப்படின்னா என்னமோ எதோன்னு பயிந்து புடாதிங்க. அதைப் பற்றி பின்னர் ஒருக்கா தெளிவா பேசுவோம்- என்னா நான் சொல்றது சர்தானே?
விளம்பரம் வந்தவுடன் உழுந்தடிச்சி எல்லோரும் ஓடி பாரதிக்கு விழா எடுக்க தங்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டோம் - நூறு ஈரோ மொய் வைத்துன்னு இங்க தேவையில்லாம எதுக்கு சொல்வானேன் - என்ன நான் சொல்றது சர்தானே? இணையத் தொழில்நுட்பத்தில் புலி ன்னு சொல்லிக்கிட்டு திரிகிற எனக்கு பாரதி125பிரான்ஸ் விழாவைப் பற்றி இணையத்தில் ஆத்துவதற்கான பாக்கியம் கிட்டியது என்றால் அது மிகையாகாது. எனக்கு இந்த ஜென்மமே சாபல்லியம் அடைந்துவிடும் இந்த மாபெரும் பாக்கியத்தை விழாக் குழுத் தலைமையிடமிருந்து போராடிப் பெற்றுத் தந்தது திருவள்ளுவர் புகழ் பாடும் திருக்குறள் அய்யா திருஅண்ணாமலை பாஸ்கர் எனும் பெருந்தகையால் என்பதை கண்டிப்பாக இங்கு பதிவு செய்வது கடமையாகும். நிற்க.
விழாக்குழு கூட்டத்துல முந்திரிக்கொட்டை மாதிரி பெரிய லார்டு லபர்தாசு போல எந்திருச்சி தலீவர பாத்து அய்யா நான் ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுரங்கோன்னு சொல்லிப்புட்டு பேச ஆரம்பிச்சேங்க. என்ன பேசனேன்னு உங்களுக்கு கேட்கிற ஆசை இல்லாட்டியும் சொல்ர மூட்ல நான் இருக்கிறதனால நான் சொல்லத்தான் போறேனுங்க. "ஐயா தலீவர் அவர்களே இது வரைக்கும் பிரான்ஸ்ல நடக்கிற தமிழ் சங்கங்கள் விழாவெல்லாத்திலேயும் வாடிக்கியா துண்டு போத்துறதும் துதிபாடரதும்மா தான் இருக்குதுங்க, விழா முடிந்த பிறகு இந்தியாவில் இருந்து வருகை தரும் சீ சிறப்பு விருந்தினர்களுக்கு டூரிஸ்ட் கைடாக சங்கத்தலவர்கள் அலைவதும் அதற்கும் மேல் ஒரு படி சென்று என்ன நடக்கும் என்பதை நீங்கள் கேட்க ஆசையாக இருந்தாலும் நான் சொல்ற முடியாத அளவிற்கு உள்ளபடியிருப்பதால், இந்த பாரதியின்125பிரான்ஸ் விழாவை சற்று வித்யாசமாக ஒரு மாபெரும் இலக்கிய விழாவாக அமைய வழி செய்யும் வகையில் தமிழகத்திலிருந்து தமிழ்க்கு அணிசெய்யும் தமிழார்வலர்களை அழைக்கவேண்டும் என்று சொன்னேன். இதை ஆமோதிக்கும் விதமாக திருக்குறள் பாஸ்கர் அவர்கள் தலீவ்ரைப் பார்த்து திரு.தமிழருவி மணியனை நாம் இம் முறை அழைக்க வேண்டும் என்று சொன்னதுதானே தாமதம் - உடனே தலீவர் குறுக்கிட்டு தமிழருவிய? கூட்டா யாருய்யா டிக்கெட் செலவு செவ்வது? அரசியல்வாதியை கூட்டா கவுர்மென்ட் செலவுலேயே வருவாங்க போவங்க. அவுங்களுக்கு பாரீசில் பாதுகாப்பு தங்கறதுக்கு எல்லாத்தையும் இந்தியன் ஏம்பசியே பாத்துக்கும், அப்படின்னு ஒரு போடு போட்டாரே... அப்ப பாக்கனுமே எல்லார் மூஞ்சியையும். எல்லாருடைய மூஞ்சியும் கோனிக்கிச்சின்னு தானே நினைச்சீங்க - அதான் இல்லே. ஒரு ரியாக்ஷ்னும் இல்லே. அல்லாரும் கோரசா ஜால்ரா அடிச்சாங்கன்னா அது தப்பாப் போயிடும் அதனால அப்படி சொல்லாம ஒத்துகிட்டாங்கன்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கு பாருங்க. எனக்கு அந்த நிமிடத்திலிருந்து விழாவிற்கும் தமிழுக்கும் பாரதிக்கும் சம்மந்தமில்லை என்ற எண்ணம் வலுக்கத் துவங்கியது.
ரி மீண்டும் வேதாளமாகிய நான் மரத்திலிருந்து இறங்கி விக்ரமாதித்த தலீவரின் கவனத்தை திருப்பும் முகமாக வேறொரு வேண்டுகோளை வைத்தேன். அதாவது பாரதியின் மேல் பல காலமாக உள்ள சில குற்றசாட்டுகள் மற்றும் கறைகளை அலசி ஆராய்ந்து ஒரு ஆய்வறிக்கை ஒன்றை பிரான்ஸில் உள்ள தமிழ் கவிஞர்களை கொண்டு செய்து விழா மலரிலோ அல்லது விழாமேடையிலேயே ஒரு விளக்க அறிக்கையாக வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். தலீவர் உட்பட அனைவரும் கைத்தட்டி இந்த யோசனையை வரவேற்றார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால் நீங்கள் உண்மையிலேயே அறிவாளிதான் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ய்யய்யோ அதெல்லாம் வீண் பிரச்சனை. அதெல்லாம் வேண்டாம் என்று தலீவர் மறுத்த பின்னர் கண்டிப்பாக இது பாரதிக்கான தமிழ் விழா அல்ல என்ற சந்தேகம் மேலும் வலுத்தது. அதற்கு பின்னர் தலீவர் அவர்கள் தான் புதுவை மாநிலத்தின் முன்னாள் முதல்வர் MOH என்று அன்போடு அழைக்கபெற்ற புதுவையின் தந்தையும் இப்பொது சவுதி அரேபியாவில் தமிழுக்காக போறாடும் இந்தியத்தூதுவர் திரு. M.O.H. பாருக்கையும், அவரைப்போலவே புதுவையில் தமிழ் பாதுகாவலராக இருக்கும் திரு.பாருக்கின் மகனாகிய மான்புமிகு அமைச்சர் திரு ஷாஜஹானையும் அழைத்துள்ளதாக சொன்ன மாத்திரத்தில் விழாக்குழுவினர் முகத்தில் பட்டொலிவீசியதின் ஆச்சரியம் தான் என்னவோ?
விழாக்குழுக் கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக வந்திருந்தும் அவரை உள்ளே வரக்கூடாது என்று மறியாதை செய்தும் கடைசி வரை அவரிடன் ஒரு சிறு யோசனையோ அல்லது ஒரு சிறு கொவுரவ பதவிகூட குடுக்காமல் அவருக்கு புகழ் சேர்த்தும் பேராசிரியர் திரு. லெபோ பெஞ்சமினே வெறுத்துப்போய் ஓடச்செய்த பெருமை யாரைச் செறும் என்பதனை நீங்கள் SMS செய்தால் உங்களுக்கு பாரதியின் முண்டாசு பரிசாக அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலும் அங்கு அமர்ந்திருக்கும் அருகதை எமக்கு இல்லை என்பதால், பாரதியின் 125வது வருடத்தை நான் எனது பாணியில் தனியே இணையத்தில் ஒரு மணிமண்டபமாக கட்ட முடிவுசெய்துள்ளேன்.
இந்த விழாக் குழுவினரிடையே நடந்த பதவிச் சண்டையைப் பற்றியும், 25 வருடத்திற்கு முன் பாரீசில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் நடைப்பெற்ற அவலங்களையும் ஒரு தனியான பதிவில் இடவுள்ளேன். இப்படியான வெளிநாடுகளில் நடக்கும் விழாக்ககளில் என்ன நடக்கிறது, யார் இலாபம் அடைகிறார்கள், எவ்வளவு, எப்படி என்பதனை இப்ப நீங்க கேட்கிற மூட்ல இருந்தாலும் எனக்கு சொல்ல நேரம் இல்லாததுனால ஒரு தனி பதிவா பின்னர் போடுகிறேன்.
பாரதியை பற்றி எனக்கு எந்த அளவுக்குத் தெறியும் என்று இணையத்தில் தேடியதில் பாரதியின் பல புதிய பரிமானங்கள் தெளியத் துவங்கியது. நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இங்கு கொண்டுவந்து இட்டுள்ளேன். அவரவர்கள் பாரதியின் மேல் உள்ள பக்தியின் அளவிற்கேற்றார் போல் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம். பக்தியை நீக்கி புத்தியை தீட்டுவோர் பாரதியை அறிந்துகொள்ளலாம். நன்றி

No comments: