இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday 4 May, 2007

கட்டபொம்மனைப் பாடாத பாரதி

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமர்சிக்கும் போதெல்லாம், ‘பாரதியை அவனது வரலாற்றுப் பின்புலத்தில் ¨¨படித்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்று கூறி விமர்சிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.
சரி வரலற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசிலிப்போம். பாரதி சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறான், கோகலே தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதிராய் போன்ற வட இந்திய தலைவர்களப் பற்றி பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம்,ரசிய்யா வைப்பற்றி எல்லாம் பாடியிருக்கிறார். காக்கை,குயில்,கிளி மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்..
ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனை பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை.சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்று இலக்கிய அறிவோ,உலக ஞானமோ இல்லாத அப்பகுதி மக்கள் கட்ட பொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் பாடதது ஏன்?
ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.
“எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து எட்டப்பனின் வாரிசான மண்ணுக்குத் தோழனாக இருந்து அவனை அண்டிப்பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும்? என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக் கூடும்.
“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி, அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்” அடேயப்பா ஈட்டி போல் பாயும் சொற்கள் பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய நேர்மைத் திறத்தைப் பற்றி பாரதி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுக்ளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருகிறார்களா?
வே.மணிக்கம் எழுதிய ‘தானபதிப்பிள்ளை வரலாறு” என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.
“கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைபற்றியோ பாஞ்சாலக்குறிச்சிப் பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு மிகுந்த நலிவுற்று பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1909 ல் ஓலைத்தூக்கும் சீட்டுக்கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில் ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய “விம்சமணி தீபிகை’(1878) நூலை செம்மைபடுத்தி தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கட்டபொம்மனைப்பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்
அதாவது எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.அத்தகைய தீயூழிலிருந்து பரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்.
புதிய கலாச்சாரம்
நவம்பர் 2006
ஆசிரியர் வி. வல்லபேசன்
puthiyakalacharam@rediffmail.com

பாரதி சொல்

சொல்? மொழி என்னும் வெளியீட்டுக் கருவியின் உறுப்பா? ஆம். அர்த்தத்தைச் சுமந்து திரியும் வாகனமா? ஆம். பேச்சிலும் எழுத்திலும் புழங்கி அங்கங்கே தேய்வு கண்டு, நிறம் கலைந்து சிறு சிறு ஊனங்களுடன் கடமை செய்து கொண்டிருப்பதா? ஆம். பெயர், வினை, இடை, உரி தலைப்புக்களில் இலக்கண அறைகளில், அகராதிகளில் அடைபட்டிருப்பதா? ஆம்.
நான் சொல்ல வருவது இந்தச் சொல்லை அல்ல; இதன் மொழியை அல்ல. இது வேறு சொல் கவிதை மொழியின் சொல். வழக்கமான மொழியிலிருந்து கவிஞன் பிரித்தெடுத்துப் புத்துருவாக்கம் செய்து கொண்ட சொல். ஓவியம் சிற்பம் போன்ற மெளனக் கலைகளிலும், இசைக் கலையிலும் வெளிப்படும் அளவுக்குக் கலைஞனின் உணர்வு, கவிதையில் மொழி ஊடகத்தின் வழியே வெளிப்படுவதில்லை. கவிஞனுடைய மிகப் பெரும் ஆதங்கம் இது. ஆனால் வேறு வழியில்லை. மொழியிலிருந்து ஒரு கவிதை மொழியை அவன் உருவாக்கிக் கொள்கிறான். சொல்லை ரசாயனம் செய்து கவிதைச் சொல்லை உருவாக்கிக் கொள்கிறான்.
சொல்லில் சொல்-பொருள் எனப் பிரித்துப் பார்க்க முடியும். கவிதையின் சொல்லில் இந்தப் பிரிவினை சாத்தியமில்லை. ஏனெனில் சொல்லின் அகராதிப் பொருளைத் தாண்டிய அம்சங்களைக் கவிதைச் சொல் தாங்கி நிற்கிறது. அத்துடன் அது என்னிடம் உன்னிடம் அவனிடம் அவளிடம் வேறுவேறு அர்த்தங்களை, படிமங்களை, உணர்வுகளை உருவாக்கக்கூடும். நேற்றிலிருந்து இன்றைக்கு வரும்போது அதன் அர்த்தம், பாவம் மாறிக் காணக்கூடும். ஆக, மொழியினுடைய வேறொரு வடிவம்தான் கவிதை மொழி. கவிதைக்கென சொல் பிடிபடுவது பெரிய தவிப்பு.
''சாமீ இவள் அழுகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்?'' ''விழியில் மிதந்த கவிதையெலாம் சொல்லில் அகப்படுமா?'' ''வண்டுரைக்க மாட்டாத விந்தையடா''
வழக்கமான அர்த்தங்களிலிருந்து சொல்லை விலக்கி, அதன் சூழலிலிருந்து விலக்கிக் கொண்டு வரும்போது, சொல் கவிஞனின் நுட்ப உணர்வுகளைத் தாங்கிக் கொள்கிறது; வேறு சொல்லாகிறது. புழக்கத்திலிருக்கும் அற்ப வார்த்தை, கவிதை வரிகளில், கவிதையின் சுற்றுச்சூழலில் அற்புதம் என நிற்கிறது. பாரதியின் ''சொல் புதிது'' எனப் பாராட்டப்பட இதுவே காரணம். அவர் கவிதைகளில் எந்தச் சொல் புதிது? எல்லாம் வழக்கிலிருக்கும் எளிய சொற்கள்தானே! புதிது என்றால் வெளியே தெரியும் தோற்றத்திலிருந்து அதன் உள்ளமைப்பு வேறுபட்டுவிட்டது என்பது பொருள்.
''மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்வந்து பரவுதல் போல்''
''நெருப்புச் சுவை குரலில்''''பொன்போல் குரலும் புதுமின் போல் வார்த்தைகளும்''''நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள்''''தீக்குள் விரலை வைத்தால்- நந்தலாலா- நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதடா''
இங்கெல்லாம் நெருப்பு, மின்னல், கனல் இவற்றுக்கு வழக்கமான பொருள்தானா? கனல்-மணம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சொற்கள். கவிதையில் இவை அருகருகே நிறுத்தப்படும்போது வேறு பிறவி எடுத்துக் கொள்கின்றன. இவை நிற்கும் இடத்தில் கவிதையின் தளம் சட்டென உயர்ந்து விடுகிறது. அர்த்தம் என்பது தேவையில்லையாகிறது. கனலின் மணம் அனுபவத்தைச் சூழ்கிறது.
'மாயை'யைப் பொய் என வெறுக்கும் பாரதி, ''நீ... ஆச்சரிய மாயையடி'' என்பதில் அர்த்தம் என்ன வரும்? இங்கே மாயை என்னும் சொல், அர்த்தத்தைக் களைந்துவிட்டு, வேறு எவ்விதமாகவும் விளக்க முடியாத ஓர் எக்களிப்பை உணர்த்த வருகிறது.
''தீ எரிக / அறந்தீ அறிவுத்தீ உயிர்த்தீ விரதத்தீ வேள்வித்தீ சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ இவையனைத்தையும் தொழுகின்றோம்'' -
எளிய சொல், எளிய வெளிப்பாடு. ஆனால் உணர்த்தப்படுவது எளியது அன்று. தர்க்கத்தின் அதிகாரத்திலிருந்து விடுபட்டு நிற்கிறது கவிதை. கண்ணதாசன் பாரதியை ''தீயரு பக்கமும் தேனொரு பக்கமும் தீட்டிக் கொடுத்து விட்டான்'' என்று பாராட்டினார். உண்மையில் பாரதிக்குத் தீ வேறு தேன் வேறு அல்ல.
''பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். இ·தோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கிறது. ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?... பல வகைகளில் மாற்றி மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டே போகிறான் - இது என்னவித உவமை? இந்த உவமை அர்த்தத் தெளிவை நோக்கியதன்று. குழலூதுவது தர்க்கம் செய்வது போலிருப்பதாக பாரதிக்கு அனுபவப்படுகிறது. சங்கீதம் சுருள் சுருளாகக் குழலிலிருந்து வெளியேறுவது ஒளி படைத்த கண்ணுக்குத் தெரிகிறது. அவரவர் அனுபவப் பாங்குக்கேற்ப அவரவர்க்குள் இந்தக் கவிதை, இயக்கம் கொள்ளும்.
அஸ்தமன அடிவானில் கணத்துக்குக் கணம் வேறு படம், வண்ண ஒளி, விசித்திரங்கள் அவற்றை நெடுக வர்ணித்தும் திருப்தியடையாத பாரதி, ''உமை கவிதை செய்கின்றான்'' என்று முடிக்கிறார். இங்கே சொல்லப்பட்ட சொற்களிலா கவிதை அடங்குகிறது?
நாம் படித்த தமிழ்க் காவியங்களைத்தான் பாரதியும் படித்திருக்கிறார். அவருக்கு அவை தந்த அனுபவம் :
''கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்லகாற்றையும் வான வெளியையும் சேர்த்துத்தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பலதீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்''
காவியத்தின் சேர்மானமாக இவற்றை யாராவது சொல்லியிருக்கிறார்களா? இளங்கோவிடமும் கம்பனிடமும் தீயை, காற்றை, வானவெளியைத் தேடி எடுக்கும் ரசனையை இந்தக் கவிதை நமக்குக் கற்பிக்கிறது. இது மிக நவீனமான கவித்துவ அனுபவம்.
இந்தக் கவிதைகளிலிருந்தெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, கவிதையில், சொல் என்பது சொல்லன்று; சொல்லிக் கொடுத்ததை ஒப்பிக்கும் கிளியன்று; தனது அர்த்தத்தைக் கொடுப்பதன்று. கவிஞனின் வரம்பற்ற உணர்வு ஆழத்திலிருந்து எட்டியவரை எடுத்து, நாம் வாங்கிக் கொள்ளும் தகுதியின் அளவுக்கு நமக்குக் கொடுக்கும் பாத்திரம் அது.
பாரதி எட்டிப்பிடிக்க விரும்பும் லட்சியச் சொல் ஒன்று உண்டு. அதுதான் 'மந்திரம் போல் சொல்'. 'நெருப்பு' என்றால் வாய் வெந்து போக வேண்டும் என்பார் லா.ச.ரா. அதுதான் மந்திரச் சொல். எந்தச் சொல் தன் அர்த்த விசிறல்களை ஒருமுனைப்படுத்தி ஒரு புள்ளியில் குவித்துப் புகை எழுப்புகிறதோ, எந்தச் சொல் சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைத்து, செயலுக்குள்ளே நுழைந்து கலந்துவிட முந்துகிறதோ அதுதான் மந்திரச் சொல். சொல்லிய மாத்திரத்திலேயே சொல் மறைந்து அதன் செயல், விளைவு நம்மை ஆக்கிரமிக்கும்.
''ஐந்துறு பூதம் சிந்திப் போய் ஒன்றாகப் - பின்னர் அதுவும் சக்திக்கனியில் மூழ்கிப் போக''
''பாழாம்வெளியும் பதறிப் போய் மெய்குலையச் சலனம் பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
''ஊழாம் பேய்தான் ஓஹோஹோவென்றலைய-வெறித் துறுமித்திரிவாய், செருவெங் கூத்தே புரிவாய்''''காலத்தொடு நிர்மூலம்படு மூவுலகும் - அங்கே கடவுள் மோனத்தொளியே தனியாயிலகும்''''ஓமென் றுரைத்தனர் தேவர்- ஓம் ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்பூமி அதிர்ச்சியுண்டாச்சு- விண்ணைப் பூழிப் படுத்தியதாஞ் சுழற்காற்று''
பாழாம் வெளி பதறுவதையும், மெய் குலைவதையும், காலம் நிர்மூலமாவதையும் நம் வாழ்வில் நாம் அனுபவம் கொண்டதில்லை. ஆயினும் இந்தச் சொற்களின் தீவிரமும் வேகமும் வாசகன் மனத்தில், முன்னுதாரணமில்லாத ஒரு உக்கிர நிகழ்வை அனுபவப்படுத்துகின்றன என்பதை உணர முடியும்.
'மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்று ஆசைப்படும் பாரதியின் கவிதைகளில் இந்த மந்திரச் சொல்லின் உயிர்ப்பு மிகச் சில இடங்களில்தான் தெரிகிறது. இந்த லட்சியத்தைத் தன் கவிதைப் பரம்பரைக்கு விட்டுப் போனார் என்று சொல்லலாம்.
II
பாரதி, மொழியை ஆயுதமாகப் பயன்படுத்திய கலகக்காரர். மரபுவழி மதிப்பீடுகளிலும் கருத்துக்களிலும் ஒவ்வாதவற்றை ஆவேசமாக எதிர்த்து மோதி மிதித்து விடத் துணிகிறவர். ஆகவே அவருடைய சொல் வெடிப்புறப் பேசும் சொல்லாக, வெப்பம் குறையாததாகயிருக்கிறது. கவிதைச் சொல்லில் உரத்த குரலும் அழுத்தங்களும் அடிக்கோடுகளுமிருப்பது பாரதி காலத்தில் குறைபாடுகள் அல்ல.
படிப்பறிவு அதிகமில்லாத சாதாரண மக்களையும் தம் கவிதை ஊடுருவ வேண்டும் எனும் அவரது நோக்கம் காரணமாக அவருடைய சொல் எளிமையானதாகவும் இருக்கிறது. பாரதியின் வாழ்வு முழுவதுமே ஓர் எதிர்க்கவிதைதான்.
பழைய ஆத்திச்சூடியின் சில சாத்வீக அறவுரைகளை பாரதியின் புதிய ஆத்திச்சூடி இடித்துத் தள்ளுகிறது. ''போர்த் தொழில் பழகு'' ''முனைமுகத்துரில்'', ''வெடிப்புறப்பேசு'', ''தையலை உயர்வு செய்'' - போன்றவை அவை.
''செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பர்பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாமென்றிங் கூதேடா சங்கம்இத்தரை மீதினில் இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடி''
''கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அ·து பொதுவில் வைப்போம்''நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்''''கூளத்தை மலத்தினையும் வணங்க வேண்டும்....''பெண்டிரென்றும் குழந்தையென்றும் நிற்பனவும் தெய்வமன்றோ''''தனியருவனுக் குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்''''தேடு கல்வியிலாததோர் ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல்''
கவிதைக்குள் தரித்திராமல் தெருவில் இறங்கிக் கலகத்தில் கலந்து கொள்ளத் துடிப்பவை பாரதியின் சொற்கள். அரசியல் மட்டுமின்றி ஆன்மீகம், வேதம், சமூக மரபுகள், ஒடுக்குமுறைகள், கலையிலக்கியக் கோட்பாடுகள் போன்ற எல்லாமே இந்தச் சொல்லடிக்கு இலக்காகின்றன. எதிர்ப்புணர்வே பாரதியின் கவிதைகளை வழி நடத்துகிறது.
கவிதையில் சொல்லுக்கு, வழக்கமான பொருளில்லை என்பதோடு, சிலசமயம் கவிஞனை முன்னுக்குப் பின் முரணானவன் என்று காட்டும் அதிர்ச்சியியல்பும் உண்டு. பாரதியிடம் இத்தகைய முரண்கள் உண்டு. முரண்படுவது என்பது தவறான நடவடிக்கை எனும் பொது நியதியைக் கவிதையின் மீது பாய்ச்சி, முரண்பாட்டுக்காகக் கண்டனம் செய்வதோ, அல்லது ஏதேதோ விளக்கங்கள் சொல்லி 'முரண்பாடில்லை' என்று கவிஞனைப் பாதுகாக்க முயல்வதோ வாசக, விமர்சன வழக்கமாக இருந்து வருகிறது. இது தேவையற்றது.
கருத்துக்களுக்குள் எச்சரிக்கையோடு புழங்கும் தத்துவ ஞானிகள் முடிச்சுகளை அகற்றி, மிகுந்த முயற்சிக்குப் பின், இழையின் இரு முனைகளையும் இணைத்துத் தர்க்கம், பகுத்தறிவு, முழுமை என்று தமக்கும் பிறர்க்கும் திருப்தி தேடுவார்கள்.
கவிஞனோ முன்பின் அற்றவன்; அந்தந்தக் கணத்தை அந்தந்தக் கணத்தில் வாழ்ந்து மடிபவன். ஒரு பிறவியில் அவனுக்கு ஆயிரக்கணக்கான பிறவிகள் உண்டு. ஒரு பிறவிக்கும் மற்றொரு பிறவிக்குமிடையே சில சிந்தனைகளில் முரண் தோன்றக்கூடும். இரண்டுமே அந்தந்தக் கணத்தின் உண்மைகள். பிரக்ஞையின் ஆழத்திற்கேற்ப உண்மை, வேறு வேறு தோற்றம் தருகிறது. வெவ்வேறு தளங்களில் தெரியும் முரண்படு தோற்றங்களைச் செயற்கையாக ஒன்றுபடுத்த முயலாமல், அப்படியே கவிதையில் பதிவு செய்கிற அக நேர்மையாளனை நாம் குற்றவாளியாக்கி விடக்கூடாது. கவிஞனின் இலக்கணம் தனக்குத்தான் முரண்படாதிருப்பதன்று; தனக்குத்தான் உண்மையாகயிருப்பது.
''கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்பைக் கதைபேணோம்கடமை அறியோம் தொழிலறியோம் கட்டென்பதனை வெட்டென்போம்மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவு மற்றிவைபோல்கடமை நினைவும் தொலைத்திங்கு களியுங் றென்றும் வாழ்குவமே''
பெரும்பாலும் செவியதிரக் குரல் கொடுக்கும் பாரதி இங்கு ஏதோ சைகை செய்வது போல் தோன்றுகிறது. ''நமக்குத் தொழில் கவிதை. நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்று பிரகடனம் செய்தவர். ''கடமை அறியோம் தொழிலறியோம்'' என்று ஒதுங்குகிறார். வசனத்தில்
''மனிதன் வேலை செய்யப் பிறந்தான். சும்மா இருப்பது சுகம்என்றிருப்பது தவறு... ஒவ்வொரு மனிதனும் உழைப்பதற்காகவேபிறந்திருக்கிறான். காரியம் செய்யாதவனைக் காண்பதும் தீது''
என்று அழுத்தமாகப் பேசியிருக்கிறார்.
''வாழ்வு முற்றிலும் கனவு''
''கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும்'' என்று விரக்தி கொள்ளும் பாரதி, 'உலகமே பொய் என்று சந்நியாசிகள் சொல்லிக் கொண்டிருக்கட்டும். குடும்பத்திலிருப்போர் உச்சரிக்கலாமா? அவச்சொல்லன்றோ? நிற்பது நடப்பது பறப்பது - கனவா தோற்றமா மாயையா? வானம் வெயில் மரச்செறிவு - வெறும் காட்சிப் பிழையா? நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?'' வாழ்வு கனவு எனக் கண்டதும், வாழ்வு கனவன்று எனக் கண்டதும் வேறுவேறு மன எழுச்சிகள்.
''யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய் வாழ்ந்திட விரும்பினேன்'' என்னும் கவிஞர், ''கொடுமையை எதிர்த்து நில்'', ''சீறுவோர்ச் சீறு'', ''உலுத்தரை இகழ்'' என்றும் சொல்கிறார். ''சினம் கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார்'' எனத் தணிப்பவரும் ''ரெளத்திரம் பழகு'' என்று முடுக்குபவரும் ஒருவரே.
பார்வைக்கு முரண்போலத் தோன்றுகின்ற, ஆனால் தத்துவத் தளத்தில் முரண் என்று ஆகாதவற்றை வசன கவிதைகளில் நிறையக் காணலாம்.
''இளமை இனிது. முதுமை நன்று- உயிர் நன்று. சாதல் இனிது....இன்பம் துன்பம் பாட்டு.. புலவன் மூடன் - இவை ஒரு பொருள்''...
''காத்தல் இனிது. காக்கப்படுதலும் இனிதுஅழித்தல் நன்று. அழிக்கப்படுவதும் நன்றுஉண்பது நன்று. உண்ணப்படுதலும் நன்று''
''உணர்வே நீ வாழ்க.. உள்ளதும் இல்லாததும் நீ. அறிவதும் அறியாததும் நீ. நன்றும் தீதும் நீ''
IV
கவிதையின் மூலம் எது? எவ்வாறு பிறப்பெடுக்கிறது? - உலக முழுவதிலும் நிறையக் கவிஞர்களின் வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளன; ஆய்வுகள் பெருகியுள்ளன. பாரதியின் வாக்குமூலமும், கவிதைகளாகிய சாட்சிகளும் மிகத் தெளிவானவை. பாரதியைத் தீர்மானித்தது காலம்; அதற்கு இசைவு கொடுத்தது அநீதிகளுக்கெதிரான அவரது போர்க்குணம்; அவரது கவித்துவம் முற்றிலும் புதிய தடங்களை உருவாக்கிக் கொண்டதன் காரணம், அவர் புலவராக ஒதுங்கி வாழாமல் சாதாரண மக்களோடு நெருங்கி வாழக் கிடைத்த பத்திரிகைத் துறைத் தொடர்பு, விடுதலை இயக்கம், இயல்பாகவே கருத்துப் பரப்பலில் அவருக்கிருந்த ஆர்வம், பிற மொழி, இலக்கிய அறிவு போன்றவை. பாரதியின் பெரும்பாலான கவிதைகள் தெளிவாக உருவாகிவிட்ட கருத்துக்கள் கவித்துவக் கிளர்ச்சியின் வழியே வெளிவந்தவைதாம். சில கவிதைகள் முன்தீர்மானமற்று நிகழ்ச்சி தந்த உந்துதலால் கருத்தும் உணர்ச்சியும் ஒட்டிக்கொண்டே பிறந்தவை. மிகச் சில கவிதைகள் கருத்துரு என்று எதுவும் தெளிவாகயில்லாமலே, தீவிரத்தன்மை வாய்ந்த உணர்வுக் கொதிநிலைகளில் கவிஞனின் பிரக்ஞைப்பூர்வமான முயற்சியை அதிகம் வேண்டாமல் தாமே பிறந்து கொண்டவை.
தனது கவிதை மொழியைக் கண்டறிவது ஒன்றே கவித்துவ வாழ்வாக அமைகிறது கவிஞனுக்கு. எழுதி எழுதித்தான் அவன் தன் சொல்லைச் செதுக்கிக் கொள்கிறான். பின்வரும் சந்ததிகளுக்கு மேலும் தீட்டிக் கொள்ளக் கொடுத்துப் போகிறான். இன்று பாரதியின் சொல் என்னவாகயிருக்கிறது? பாரதிதாசனைத் தாண்டி வந்த பின் அது எங்கே போயிற்று?
''பாரதிக்குப் பின் பிறந்தார் பாடை கட்டி வச்சிவிட்டார்ஆரதட்டிச் சொல்வார் அவரிஷ்டம் நாரதனே'' என்று
புதுமைப்பித்தன் மிகைப்படுத்திச் சொல்கிறார். பாரதிக்குப் பின் அந்த அளவு வேகம், வெறி, தீவிரம் கொண்ட கவிதை இயக்கம் எதுவும் தோன்றவில்லைதான். ஆனால் குரல் உயர்த்தாத, படபடக்காத, வெளித் தெரியாத வீர்யம் கொண்ட கவிதைகள், விமர்சனமும் அங்கதமுமாய் அமைந்தவை, உள்நுழையும் தேட்டம் கொண்டவை எனப் பலவாறு கவிதைகள் வளர்ச்சி கண்டுள்ளன. எனினும் பாரதிக்குப் பின் அறுபதாண்டு கால வளர்ச்சிக்கு இவைகளைக் கொண்டு கணக்குக் காட்ட முடியாது என்பது உண்மை.
( மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - தமிழியற்புலம் - மகாகவி பாரதியார் கருத்தரங்கம் 1998 மார்ச் 5, 6 )

அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது - வி.ஓ.சி

சுப்பிரமணிய பாரதி என்னும் பெரியார் திருநெல்வேலி ஜில்லா எட்டயபுரம் சமஸ்தானம் எட்டயபுரத்தில் பிறந்தவர். அவர் தகப்பனார் பெயர் சின்னச்சாமி அய்யர். அவர் எட்டயபுரம் சமஸ்தானத்தில் ஓர் உத்தியோகம் புரிந்து கொண்டிருந்தார். அவர் காலத்தில் என் தகப்பனாரும் அந்த சமஸ்தானத்தின் வக்கீலாயிருந்தனர். என் தகப்பனாருடன் அவர் என் சொந்த ஊராகிய ஒட்டபிடாரத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. அக்காலத்தில் என் ஊரில் தாலுகாக் கச்சேரியும், தாலுகா மேஜிஸ்டிரேட்டுக் கோர்ட்டும் இருந்தன. அவ்விரண்டில் ஒன்றில் ஏதேனும் ஒரு ஜோலியாக அவர் என் ஊருக்கு வருவர். என்னூருக்கு வந்த காலங்களில் அவர் என் வீட்டிலாவது, என் வீட்டிற்கு மேற்கேயுள்ள பழைய பாஞ்சாலங்குரிச்சித் தானாபதிப் பிள்ளை வீட்டுக் கூடத்தின் மாடியிலாவது தங்குவர். அப்போது எனக்கு வயது 15 அல்லது 16 இருக்கும். அவர் என்னோடும் மற்றையாரோடும் பேசிய மாதிரியிலிருந்து அவர் ஒரு பெரிய மேதாவியென்று நான் நினைத்தேன். அவரிடம் நான் சென்ற சமயங்கள் சிலவற்றில் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலியென்றும், அவன் சிறு பிள்ளையாயிருந்தும் தமிழில் சுயமாகப் பாடுவானென்றும் என் தகப்பனார் என்னிடம் சொல்வதுண்டு. அச்சிறு பிள்ளைதான் சுப்பிரமணிய பாரதி என்று இப்போது உலகமெல்லாம் புகழப்பெற்று விளங்கும் பெரியார்.இப்பெரியாரை நான் முதல் முதலாகப் பார்க்கப் பாக்கியம் பெற்றது அவர் சென்னையில் இந்தியா என்னும் பெயர் பெற்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராயிருந்து அதனை நடத்தி வந்த காலத்தில்தான். அது 1906-ம் வருஷ ஆரம்பமாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அப்போது நான் தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்றிருந்தேன். திருவல்லிக்கேணியில் சுங்குராம செட்டி தெருவில் என் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நான் பட்டணம் போகிற வருகிற வழியில் கண்ட ஒரு பெரிய வீடு இந்தியாவின் அதிபர் திருமலாச்சாரியார் வீடு என்று தெரிந்தேன். ஒரு நாள் மாலை 4 மணிச் சுமாருக்கு நான் இந்தியாவின் அதிபரைப் பார்க்கக் கருதி அவர் வீட்டுள் புகுந்தேன். அங்கிருந்தோர் அவர் மாடியில் இருக்கிறார் என்றனர். நான் மாடிக்குச் சென்றேன். இளவயதுள்ள ஓர் அய்யங்காரைக் கண்டேன். அவர்தான் இந்தியாவின் அதிபர் என்று நினைத்து அவரை உசாவினேன். அவர் ஆம் என்றார். அவரிடம் என் ஊரும் பேரும் சொன்னேன். உடனே அவர் மாடியின் உள்ளரங்கை நோக்கி, ""பாரதி! உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கின்றனர்"" என்று கூறினர். உடனே அங்கிருந்து பாரதியும் வேறொருவரும் வந்தனர். அய்யங்கார் ""இவர்தான் இந்தியாவின் ஆசிரியர் சுப்பிரமணிய பாரதி"" என்றார். அவர் என் ஊரையும் பெயரையும் உசாவினர். ""ஓட்டப்பிடாரம் வக்கீல் உலகநாத பிள்ளை மகன் சிதம்பரம் பிள்ளை"" என்றேன்.""உங்கள் தகப்பனார் என் தகப்பனாரின் அதியந்த நண்பர். அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். உங்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்"" என்றார் பாரதியார். நால்வரும் பெரும்பாலும் பாரதியாரும் நானும் சிறிது நேரம் தேச காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது. நால்வரும் மாலை 5 மணிக்குத் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்றோம். அங்கிருந்து வங்காளத்தின் காரியங்களையும் பெபின் சந்திரபாலர் முதலியோரின் பிரசங்கங்களையும் செயல்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அச்சமயம் கடற்கரை விளக்குகளும் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. நால்வரும் வீடு திரும்பினோம். பின்னர், நாள்தோறும் நான் இந்தியா அதிபர் வீட்டிற்கும், இந்தியா ஆபீஸ்க்கும், கடற்கரைக்கும் செல்லலானேன் அதிபரும் ஆசிரியரும் நானும் பேசலானோம். ஆசிரியரும் நானும் முறையே கம்பரும் சோழனுமாகி, மாமனாரும் மருமகனும் ஆயினோம்.ஒருநாள் மாலையில் நாங்கள் மூவரும் கடற்கரையில் வங்காளத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த காலையில், அங்குக் காளிதேவிக்கு வெள்ளாடு பலி கொடுப்பதைப் பற்றிப் பாலர் பேசிய பேச்சிற்கு என் மாமனார் ஓர் வியாக்கியானம் செய்தார். அவ்வியாக்கியானத்தைக் கேட்டதும் நான் கொழுத்த தேசாபிமானியாய் விட்டேன். அது முதல் அவர் என் வீட்டிற்கு வரவும், என்னோடு உண்ணவும் உறங்கவும், நான் அவர் வீட்டிற்குப் போகவும், அவரோடு உண்ணவும் உறங்கவும் ஆயிருந்தோம். பிரான்ஸ் தேசத்துச் சரித்திரமும், இத்தாலி தேசத்துச் சரித்திரமும், அவைபோன்ற பிறவும் அவர் சொல்லவும் நான் கேட்கவுமானோம். இத்தாலி தேசாபிமானி மிஸ்டர் மாஸினியின் தேசவூழிய ""யௌவன இத்தாலி"" சங்கத்தின் அங்கத்தினராகச் சேர்ந்தோர் செய்வதுவந்த பிரமாணச் செய்யுளை ஆங்கில பாஷையில் என் மாமனார் எனக்குப் படித்துக் காட்டினார். அதனைக் கேட்டதும் நான் சொக்கிப் போனேன். அச்செய்யுளைத் தமிழ்ப் பாட்டாக மொழியெர்த்துத் தரவேண்டுமென்றேன். அவர் அதனை அன்றே தமிழ்ப் பாட்டாக மொழியெர்த்துத் தந்தார். அதுதான் ""பேரருட் கடவுள் திருவடியாணை"" என்று தொடங்கும் பாட்டு. தேச ஆட்சியைச் சீக்கிரம் கைக் கொள்ளுதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளைப் பற்றி பேசினோம். பிரசங்கம் செய்தோம். தேசாபிமானத்தின் ஊற்றென விளங்கும் திருவல்லிக்கேணிக் கோவிற்பக்கத்திலுள்ள மண்டையன் கூட்டத்தாராகிய திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாஸச்சாரியார் முதலியவர்களோடு அடிக்கடி பேசலானோம். ஆலோசிக்கலானோம். அவ்வாலோசனையின் பயனாகத் திருவல்லிக்கேணியில் சென்னை ஜன சங்கம் என்று ஒரு தேசாபிமானச் சங்கத்தை ஸ்தாபித்தோம். பின்னர், நான் தூத்துக்குடிக்குத் திரும்பினேன். தேச அரசாட்சியை மீட்டும் வேலைகளில் ஈடுபட்டேன்.

(வி.ஒ.சி கண்ட பாரதியில் இருந்து ஒரு பகுதி)

ஆங்கிலத்தில் பாரதியின் எழுத்துக்கள்

ஆங்கில மொழியில் பாரதி மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர், தமது சுயசரிதையில் ஆங்கிலக் கல்வியை இகழுகிறார். தமிழுக்குப் பதிலாக ஆங்கிலம் கற்பதையே கண்டித்திருக்கிறாரே தவிர, ஆங்கிலத்துக்கு எதிரான எண்ணம் அவரிடம் இருக்கவில்லை. உண்மையில் ஆங்கில இலக்கியத்தை அவர் பெரிதும் நேசித்தார். ஷெல்லி, விக்டர் ஹ்யூகோ ஆகியோரின் அழகிய ஆங்கில, பிரஞ்சு மூல நூல்களையும் காய்தேயின் ஆங்கில மொழியெர்ப்பு நூல்களையும் தாம் படித்து ரசித்திருப்பதாக பாரதியே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆங்கிலக் கவிஞர்களின் உயர் கற்பனைப் பாடல்கள். அவருக்கு மிகவும் பிடித்தமானவை. தமிழ் நாட்டின் ஷெல்லி என்று தம்மைக் கருத வேண்டும் என்பது, பாரதியின் தலையாய விருப்பம். பாரதியன் தம்பி சி. விசுவநாதன் எழுதுகிறார்:"பாரதி, ஷெல்லியன் கில்டு என்ற சங்கம் ஒன்றை அமைத்து, புகழ்பெற்ற அந்த ஆங்கிலக் கவியின் பாடல்களை, உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்."ஆங்கில சஞ்சிகைகளான நியூ இந்தியா, காமல் வீல் ஆர்யா போன்றவற்றுக்கு அவ்வப்போது பாரதி கட்டுரைகள் எழுதி வந்தார். ஆங்கிலக் கட்டுரைகளிலும், பாரதியின் தனித்திறனும், உயிரோட்ட நடையும் காணப்படுகின்றன. தாம் எண்ணியவற்றை பாரதி எழுத்தில் வடித்தார். பாரதியின் ஆங்கில எழுத்துக்கள், "எஸ்·ஸஸ் அண்ட் அதர் புரோஸ் ஃபிராக்மண்ட்ஸ்," "அக்னி அண்ட் அதர் பொயம்ஸ் அண்ட் டிரான்ஸ்லேஷன்ஸ்" என்ற இரண்டு சிறு நூல்களாக வெளி வந்திருக்கினறன. "ரசத்வனி" தத்துவம் முதல் "சாதி எனும் குற்றம்" வரை பல விஷயங்கள் பற்றி பாரதி எழுதியிருக்கிறார். "பெண்களின் நிலை" என்பதை விவரிக்கையில் பின்வரும் உத்வேகத்தில் பாரதி எழுதுகிறார்:"தேசங்கள் என்பவை, குடும்பங்களால் ஆனவை. உங்கள் வீட்டில், நீதியையும் சமத்தவத்தையும் நீங்கள் முழு அளவில் அனுசரிக்காவிடில், பொது வாழ்வில் அவை அனுசரிக்கப்பட வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது. குடும் வாழ்க்கை தான் பொது வாழ்வுக்கு அடிப்படையாகும். வீட்டில் அயோக்கியனாக நடந்துகொள்ளும் ஒருவன் சட்டசபைகளிலோ, நீதி மன்றங்களிலோ சேர்ந்தவுடனே ஞானியாகிவிட முடியாது."அவருடைய எழுத்துக்களில் ஒளிவு மறைவு ஏதும் கிடையாது. அவரது சொற்கள், உள்ளத்தின்று உயிப்பவை, ஆதலால் அவை நேரடியாகப் பாய்பவை."பேச்சுரிமை என்பது, நல்லறிவு படைத்த அரசின் உண்மைத் தோழன் மாதிரி. மனிதர்களின் குரல்களை ஒடுக்கும்போது அவர்களின் உள்ளங்களிலே கசப்பை ஏற்படுத்தி, அவற்றைக் கடினமாக்குகிறோம். மனமே உலகம். எண்ணங்களே பொருள்கள்.""விவேகமுள்ள அரசன் ஒருவன், பத்து லட்சம் மூடர்களின் கண் முடித்தனமான விசுவாசத்தைவிட நூறு சிந்தனையாளர்களின் மரியாதையைப் பெரிதாக மதிக்க வேண்டும் என்று, பழைய இந்திய எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். எந்த அரசையும் மதிப்பதற்கு முதல் நிபந்தனை, எல்லா விஷயங்களிலும், எல்லாக் கட்சிகளுக்கும் பேச்சுரிமையை அனுமதிப்பதாகும்."ஒரு சில ஆங்கிலக் கவிதைகளையே பாரதி புனைந்தார். ஆயினும் அவை, ஆங்கிலத்தில்அவருக்கிருந்த புலமையைக் காட்டுகின்றன. எடுத்ததற்கெல்லாம் நவீன மோகம் கொள்வதை அவை வெறுக்கின்றன. வசன கவிதைகள் அன்னியில் ஆங்கிலப் பாட்டுக்களையும் "இன் ஈச் அதர்ஸ் ஆர்ம்ஸ்" என்ற பாட்டைப் போல வேகமான நடையில் எழுதியிருக்கிறார்.
நன்றி: சுப்பிரமணிய பாரதி -SIFY TAMIL

பாரதி ஒரு சூப்பர்மேன்: - கல்யாணசுந்தரம்

நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் இப்போதும் மாறாத பழைய வீடொன்றில் உள்ளே மர நாற்காலியில் அமர்ந்தபடி தன் நினைவுகளின் நதியில் நீந்திக் கொண்டிருக்கிறார் கல்யாண சுந்தரம் என்ற 92 வயது வாலிபர். வயோதிகம் பற்றிய உடல் என்றாலும் பேச்சு உடையவில்லை. ஞாபகம் சீராகப் பாய்கிறது. பாரதியாரோடு பழகிய தன் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பேசிக் கொண்டேயிருக்கிறார். பேச்சு இளைஞரின் உற்சாகத்தோடும், ஈர்ப்போடும் இருக்கிறது. சமீபத்தில் வெளியான 'சுப்பிரமணிய பாரதி' விவரணப் படத்தில் தன் நினைவுகளைப் பதிவு செய்திருக்கிறார் கல்யாண சுந்தரம். அவரை நேரில் சந்தித்து 'ஆறாம்திணை' க்காகப் பிரத்தியேகமாகப் பேசிய நினைவுப் பெருக்கிலிருந்து சில துளிகள்..... * பாரதியாரை எப்போது சந்தித்தீர்கள்? ''1919 ம் வருஷம் அவர் கடையத்துக்கு வந்தாரு. அப்போ நான் சின்னப் பையன். புதுசா எது வந்தாலும் வேடிக்கை பாக்கிற மாதிரிதான் பாரதியாரையும் வேடிக்கை பார்க்கப் போனோம். அவர் மனைவி செல்லம்மா வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அவர் மனைவியோட சகோதரர் அப்பாத்துரை தான் பாரதியாரை கவனிச்சுக்கிட்டு இருந்தார்.'' * அப்போ பாரதி எப்படியிருந்தார்? ' ரொம்ப மிடுக்கான ஆளு, குரல் கார்வையா இருக்கும். தெருவிலே நேரே நடந்து மிலிட்டரிக்காரர் மாதிரி போவாரு. சாயங்காலமாச்சுன்னா கல்யாணியம்மன் கோயிலுக்குப் போவாரு... அவருக்கு அக்ரஹராத்தில மதிப்பே இல்லை. யாரோடயும் சேரவும் மாட்டாரு... அவங்களும் இவரை ரொம்பத் தாழ்வாதான் நடத்தினாங்க.'' * அவரைப் பத்தின ஞாபகங்களைச் சொல்லுங்களேன்? '' ஒரு நாள் ஊருக்கு வெளியில ஒரு கழுதை குட்டியோடு படுத்துக் கிடந்தது. கழுதைக் குட்டி கிட்டே போய் பாரதி உட்கார்ந்துகிட்டு அதைத் தடவித் தடவி விட்டுக்கிட்டு அதைக் கொஞ்சிகிட்டு இருந்தாரு. சின்னப்பிள்ளைகளுக்குத் தர்ற மாதிரி முத்தமெல்லாம் குடுத்தாரு. பார்க்கிறவங்க இந்த ஆளுக்குப் புத்தி கெட்டு போச்சுன்னு சொல்லிக்கிட்டுப் போனாங்க. இவரு அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை.'' * உங்களுக்கு அப்போ வயது என்ன இருக்கும்? '' பள்ளிக்கூடத்தில படிச்சுக்கிட்டு இருக்கேன். பத்து, பனிரெண்டு வயசு இருக்கும். பாரதியாரோட மக சகுந்தலா நான் படிச்ச ஸ்கூல்ல சின்ன வகுப்பிலே படிச்சுக்கிட்டு இருந்தா... நான் பாரதியாரைப் பார்க்கப் போனா வீட்டில திட்டுவாங்க.. யாருக்கும் தெரியாமதான் போயி பார்ப்போம். என் வயசு பையன்க நாலஞ்சு பேர் தினம் போயி அவரைப் பாத்து பேசுவோம். அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊரைவிட்டு வெளியே வந்து ஏதாவது இடத்தில உட்கார்ந்துகிட்டு பேசிகிட்டு இருப்பாரு. அக்ரஹராத்தில இருந்த ஆட்கள் அவரைக் கண்டா முகத்தைத் திருப்பிகிடுவாங்க.. . அப்பாத்துரை மட்டும் தான் அத்திம்பேர்னோ, ஓய் பாரதின்னோ கூப்பிட்டுப் பேசுவார். பாரதியார் தினம் கடுதாசி எழுதுவார். அவருக்கு லஹரி வஸ்துகள் உபயோகிக்கிற பழக்கம் இருந்துச்சு. அதைப் புகைக்க ஏற்பாடு பண்றதுக்கு ஆறுமுகம்னு ஒருத்தன் இருந்தான். புகைகுழல் ஏற்பாடு பண்ண வீட்டுக் கிணற்றில இருக்க கயிற்று நுனியை வெட்டி எடுத்துக்கிடுவாரு. அது சன்னமா இருக்கும். அதை மெல்லுசாப் பொசுக்கி அதை ஈரத்துணியிலே சுத்தி ஏற்பாடு செய்வாங்க. அவர் கண்ணு அப்போ துடிச்சுக்கிட்டேயிருக்கும். எப்பவாவது அவர் கவிதைகளைப் பாடுவாரு. எழுதி வச்சதப் பாடுறாரா, இல்லை இப்போதான் புனைஞ்சு பாடுறாரான்னு தெரியாது. ஆனா எதுக்க இருக்க ஆள் அவர் குரலைவிட்டு விலக முடியாம இருக்கற மாதிரி பாடுவாரு''. * அவரோட கவிதைகளை அப்பவே வாசிச்சு இருக்கீங்களா? ''ஸ்வதந்திர கீதங்கள், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு இது போன்ற புஸ்தகங்களை எல்லாம் நாலணா, எட்டணாவிற்கு விற்பாரு. நாங்க வாங்கிப் படிப்போம். இப்போ அவர் புஸ்தகத்தை 60 ரூபா, நூறு ரூபான்னு விக்கிறாங்களே எதுலயும் அப்பிடி சுத்தமா பதிப்பிச்ச கவிதை இருக்காது.'' * தினசரி பார்ப்பீங்களா? '' ஒரு ஆறு மாசம் இருக்கும். தினம் பார்ப்போம். அவர் அக்ரஹாரத்தில இருந்தாலும் அதுக்குக் கட்டுப்பட்டு நடக்கலை. நல்ல மீச வச்சிருந்தார். அல்பெர்கா கோட்டு, விறைப்பா கையை வெச்சுக்கிட்டு நடப்பாரு. அவர் போகும்போது சில பேர் அவர் முன்னாடியே, 'பிரஷ்டன்... பிரஷ்டன்' னு சொல்லி விலகிப் போறதப் பாத்திருக்கேன். யாரும் அவருக்கு மதிப்புக் குடுக்கலை. கொஞ்சநாள் அவரை அக்ரஹாரத்துக்குள்ளவே சேத்துக்கலை. வெளியே ஒரு இடத்தில தனியா இருந்தாரு. வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு கொடுத்திட்டு வருவாங்க. ஒரு நாள் பாரதியார் இன்னைக்கு 'சாகாமல் இருப்பது எப்படி?' ன்னு சொற்பொழிவு செய்யப் போறாருன்னு தண்டோரா போட்டாங்க. அவர் வீட்டு முன்னால கூட்டம் நடந்தது. பாரதியார் வந்தாரு. கூட்டத்தைப் பாத்துக்கிட்டே, ' ஜெயபேரிகை கொட்டடா' பாட்டைப் பாடினாரு. கண்ணு அப்பிடி அம்பு மாதிரி கூர்மையா இருக்கு. கொட்டடா, கொட்டடான்னு அவர் சொல்ற வேகத்தைக் கேட்ட தண்டோரா போடுறவன் நம்மளைத்தான் சொல்றாரு போல இருக்குன்னு நினைச்சு நிஜமாவே தண்டோராவை அடிச்சான். அப்பிடி வீரமா பாடுவாரு. அவருக்குப் பொய் பேசினா பிடிக்காது. திட்டுவாரு. கோபப்பட்டு எதாவது செய்துட்டாலும் பிறகு மன்னிப்புக் கேட்டுக்கிடுவாரு. வயது வித்தியாசம் பாக்காம மன்னிப்புக் கேட்டுடுவாரு. அவரோட மதிப்பு அன்னைக்கு எனக்குத் தெரியிலே. வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்துகிட்டே பழகுவோம்.'' * அவரோட பழக்கமெல்லாம் எப்படியிருந்தது? '' யார்கிட்டயும் நிமிர்ந்து பாத்துதான் பேசுவாரு. அவரு தெய்வத்தை வேண்டுறபோது எதிரே நிக்கற மாதிரிதான் 'அம்மா... சக்தி' ந்னு உரக்க சொல்வாரு. எல்லாத்துலயும் அவருக்கு சக்தி இருக்கிற மாதிரிதான் சொல்வாரு. அவர்கிட்டே ரொம்ப நாளா யானையோட விளையாடுற பழக்கம் இருந்துச்சு. கோவில்ல இருந்த யானைகிட்டே போயி, பாகன் கிட்டே எட்டணா குடுத்துட்டு 'யானையைத் தொட்டுப் பாக்கட்டா' ன்னு கேப்பாரு. அவன் 'அதுக்கு என்ன! பாருங்க சாமி' ன்னு சொல்வான். தும்பிக்கையைச் சுத்தி கையைப் போட்டுக்கிட்டு முத்தம் குடுப்பாரு. சில சமயம் பல்லுல மெல்ல அதை கடிப்பாரு. அதுக்கு வலிக்கவா போகுது.விளையாடிகிட்டேயிருப்பார். அதுதான் பின்னாடி அவருக்கு வினையா வந்துச்சு. யானைன்னா ஆச்சரியமா பார்ப்பாரு. குழந்தை மாதிரி.'' * உங்களோட குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க? '' நான் 'குற்றாலக் குறவஞ்சி' எழுதின திரிகூடராசப்பக் கவிராயர் வம்சாவழியில பிறந்தவன். மண உறவுகள் வழியா அது தொடர்ந்துச்சு. நான் நாடகம், கவிதை, கதையெல்லாம் எழுதியிருக்கிறேன். பாரதியார் மேல கூட கவிதைகள் பாடியிருக்கேன். இப்போ எனக்கு 92 வயசாகுது. கல்கியில அந்தக் காலத்துல 'கண்ணா மூச்சி'ங்கற என் கதை பரிசு வாங்கிச்சு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு அரசாங்க வேலைக்குப் போயிட்டேன். பாரதியோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம். யாருக்கு அது கிடைக்கும் ?'' * புதுமைப்பித்தனைத் தெரியுமா? ''அவரு எனக்கு சொந்தக்காரர்தான். பார்த்ததில்லையே தவிர கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகளைப் படிச்சிருக்கிறேன். புதுமைப்பித்தனை விருத்தாசலம்னு சொன்னாத்தான் இங்க பலருக்கும் தெரியும். அவுங்க அப்பா பெரிய ஆராய்ச்சியாளர். புஸ்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரு.'' * இப்போ பாரதியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? ''அவர் ஒரு சூப்பர்மேன். அவர்கூட கொஞ்ச காலம் பழகினதுக்கு எனக்கே இந்த மரியாதை கிடைக்குதுன்னா பாத்துக்கோங்க. எல்லாம் தெய்வ சித்தம்.'' சந்திப்பு : ஹரிகிருஷ்ணா நன்றி: இணையத் தமிழ் தொகுப்பு

பாரதி திருமண வைபவம்

1897ம் வருஷம் ஜ°ன் மாதம் பாரதிக்கும், செல்லம்மாளுக்கும் அதிவிமரிசையாக நாலு நாள் கல்யாணம் நடந்தது.அந்தக் கல்யாண விமரிசையைச் செல்லம்மா பாரதி பின்வருமாறு விவரிக்கிறார். ""கிருஷ்ண சிவன் (பாரதியின் அத்தை கணவர்) அவர்களின் நண்பர்களான ராமநாதபுரம் ராஜாவிடமிருந்தும், சேத்தூர், தலைவன்கோட்டை ஜமீன்தார்களிடமிருந்தும், பட்டும் பட்டாவளியுமாகச் சால்வைகள், மோதிரங்கள், முத்து மாலைகள் முதலிய வெகுமதிகள் ஏராளமாய் வந்தன. தங்க நாதஸ்வர வித்வான் ரத்னசாமியை ராமநாதபுரம் ராஜா அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அந்தச் சமயம் கியாதியடைந்திருந்த திருநெல்வேலி அம்மணி பரதநாட்டியம். பாரதியாருக்கு பால்ய விவாகத்தில் அவ்வளவாகப் பிரியமில்லாவிடினும், ரசிக்கத் தகுந்த கேளிக்கைகள் மிகுதியாயிருந்தமையால் விவாகத்தில் உற்சாகமாகவே காணப்பட்டார். அப்போது பாரதிக்கு வயது பதினாலரை. செல்லம்மாளுக்கு வயது ஏழு.விவாகமானவுடன் கணவன் மனைவி பேசுவது வழக்கமாக இல்லாத அந்தக் காலத்திலேயே, பாரதி தமது புதிய கருத்துக்களைக் காட்டத் தொடங்கினாராம். எல்லோருக்கும் எதிரில்,""தேடக் கிடையாத சொன்னமே ■உயிர்ச்சித்திரமே! மட அன்னமே!....கட்டியணைத் தொரு முத்தமே ■தந்தால்கை தொழுவேன் உனை நித்தமே''என்று காதல் பாட்டுகள் பாடினாராம்.""நான் நாணத்தால் உடம்பு குன்றி, எல்லாரையும் போல் சாதாரணமான ஒரு கணவன் கிடைக்காமல், நமக்கென்று இப்படி ஓர் அபூர்வமான கணவர் வந்து வாய்க்க வேண்டுமா என்று எண்ணித் துன்புறுவேன். கிராமத்தில் பழகிய, ஒன்றும் தெரியாத ஏழு வயதுச் சிறுமிக்குக் கவிஞர்களின் காதல் ரஸ அனுபவம் எப்படிப் புரியும்?'' என்று செல்லம்மாள் கூறுகிறார். மேலும்,""விவாகத்தின் நாலாம் நாள், ஊர்வலம் முடிந்து, பந்தலில் ஊஞ்சல் நடக்கிறது. ஓர் ஆசுகவி இயற்றினார். அதை இனிய ராகத்தில் பாடி, பொருளும் உரைத்துக் குட்டிப் பிரசங்கம் ஒன்றும் செய்தார். கல்யாண விமரிசையைப் புகழ்ந்து, அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும். என் தகப்பனார் கல்யாணத்திற்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்து, வித்வான்களின் சங்கீதத் திறமையை மெச்சி இயற்றிய பாடல் அது. அதைக் கேட்டு யாவரும் "பலே பேஷ்!' என்று ஆரவாரித்து, "மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லப்பா அய்யருக்கு வாய்த்தது போல் வாய்க்க வேண்டும். மணிப்பயல், சிங்கக்குட்டி!' என்றெல்லாம் அவரவர் போக்கின்படி புகழ்ந்தார்கள். என் தகப்பனார் மாப்பிள்ளையைக் கண்டு உள்ளம் பூரித்து, உடல் பூரித்து மகிழ்ச்சியடைந்தார்.''

பாரதியாரின் கடைசி நாள்

1921 செப்டம்பர் 11ம் தேதி இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்...""அன்றிரவு பாரதி தமது நண்பர்களிடம், "அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸўக்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னனாக இருந்தவர். 1914 ■ 18 முதல் மகாயுத்தத்தில் ஜெர்மானியருக்கு சாதகமாக இருந்தார் என்று சண்டையில் வெற்றி பெற்ற பிரிட்டிஷார் அவர் மீது கறுவிக் கொண்டிருந்தனர்.முன்னிரவில் பெரும் பாகம் மயக்கத்தில் இருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்'' என்கிறார் நீலகண்ட பிரம்மச்சாரி.இன்னொரு நண்பரான பரலி சு. நெல்லையப்பர் கூறுகிறார்...பாரதியார் பாயும் படுக்கையுமா யிருந்த செய்த சிந்தாத்திரிப் பேட்டையிலிருந்த எனக்குக் கடைசி நாளில்தான் தெரிய வந்தது. நான், லக்ஷ்மண ஐயர் என்ற எனது நண்பர் ஒருவருடன் அவரைப் பார்க்கச் சென்றேன். பாரதியார் நிலை கவலைக்கிடமாய் இருந்தது. அவர் மயக்க நிலையில் கிடந்தார். திருவல்லிக்கேணி மாட வீதியில் குடியிருந்த டாக்டர் ஜானகிராம் என்கிற வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து காட்டினோம்.அவர் பாரதியார் உடம்பைப் பரிசோதனை செய்து ஏதோ மருந்து கொடுக்க விரும்பினார். ஆனால், பாரதியார் மருந்தை அருந்தப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். டாக்டர் அவரிடம் பேசி மருந்தை அருந்தும்படி வாதாடியபொழுது பாரதியார், "எனக்கு எந்த மருந்தும் வேண்டாம்" என்று கண்டிப்பாகக் கோபமாகச் சொல்லிவிட்டார்.எனவே, வைத்தியர் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டார். பாரதியார இரவெல்லாம் மயக்க நிலையிலேயே இருந்தார்.பாரதியார் நிலையை அறிந்த நானும் நண்பர் லக்ஷ்மண ஐயரும் அவ்விடத்திலேயே இரவில் தங்கி வந்தோம். எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி, எழுந்து, எமனுடன் போராடிக்கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம்.பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கியது. உலகத்தாருக்கு "அமரத்துவம்" உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார்."கரவினில் வந்து உயிர்க்குலத்தினை அழிக்கும்காலன் நடுநடுங்க விழித்தோம்"என்றும்,"காலா என் கண்முன்னே வாடா ■ உன்னைக்காலால் உதைக்கிறேன்"என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்.பாரதியாரின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்தவுடன் நகரத்திலுள்ள நண்பர்களுக்குச் சொல்லி யனுப்பினோம். எங்களுக்கு நண்பர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் அப்பொழுது மிகச் சிலரே. அப்பொழுது மண்ணடி ராமசாமி தெருவில் குடியிருந்த வக்கீல் சா. துரைசாமி ஐயர், இந்தி பிரசார் ஹரிஹர சர்மா, மாஜி மேயர் சக்கரை செட்டியார், அப்பொழுது புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த எதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா ■ நால்வரும் குறிப்பிடத்தக்கவர்கள்.பாரதியாரின் குடும்பத்திற்கு எப்பொழுதும் ஆதரவு புரிந்து வந்த வக்கீல் துரைசாமி ஐயரே பாரதியாரின் கடைசி நாள் கிரியைக்கும் உதவி புரிந்தார்.பாரதியார் உடலை மறுநாட் காலை எட்டு மணிக்குத் திருவல்லிக்கேணி மயானத்திற்கு தூக்கிக்கொண்டு போனோம். நானும் லக்ஷ்மண ஐயரும், குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், ஹரஹர சர்மா, ஆர்யா முதலியவர்கள் பாரதியார் பொன்னுடலை இறுதியாகத் தூக்கிச் செல்லும் பாக்கியம் பெற்றோம். பாரதியார் உடலம் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடலம் சுமார் அறுபது பவுண்டு நிறை இருக்கலாம்.இன்று உலகம் போற்றும் கவிச் சக்கரவர்த்தியுடன் அன்று கடைசி நாளான திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேர் இருக்கலாம்.பிராமணர்களுக்குகென்று குறிக்கப்பட்டிருந்த பகுதியில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.பாரதியார் பொன்னுடலை அக்னி தேவனிடம் ஒப்புவிக்கு முன்னர் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.■இவ்வாறு நெல்லையப்பர் பாரதியின் கடைசி நாளை உருக்கமாக விவரித்துள்ளார்.பாரதிக்கு பிள்ளை இல்லாததால் யார் அவருக்கு கொள்ளியிடுவது என்று பேச்சு வந்தபோது யாரோ, நீலகண்ட பிரம்மச்சாரி கொள்ளியிடலாம் என்று சொன்னார்கள். உடனே அவர், ""என்ன, நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளி கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்த சடங்குகளை செய்ய மாட்டேன். அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்'' என்று மறுத்துவிட்டார். முடிவில், பாரதியின் தூரத்து உறவினரான வி. ஹரிஹர சர்மாதான் கர்மங்களை செய்தார். தென் தமிழ்நாட்டில் சித்திரபானு கார்த்திகை 27, மூல நட்சத்திரத்தில் (1882 டிசம்பர் 11) தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் துன்மதி வருஷம் ஆவணி மாதம் 27ம் தேதி (1921 செப்டம்பர் 12) ஞாயிறன்று, அதிகாலை 1.30 மணிக்கு பூத உடல் நீங்கி புகழ் உடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை. சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன.

நாராயண நாமம் - திருமதி செல்லம்மாள் பாரதி

எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.
வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்வாழிய
பாரத மணித்திரு நாடு
(திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.)
நன்றி: பாரதியார் சரித்திரம்

சில ஆசாரத் திருத்தல்காரர்களின் தப்பெண்ணம்

இந்த சமயத்தில் ஆசாரத் திருத்தல்காரர்களின் கோட்பாடுகள் சரியா, தப்பிதமா என்ற விஷயத்தைப் பற்றி நாம் விவரிக்கப் போகிறதில்லை. பெண் கல்வி அவசியம்தானா? விதவைகளுக்கு விவாகம் செய்யலாமா? ஜாதி பேதங்களை நீக்கி விடுதல் கட்டாயமா? வேசையர் நடனம், பாட்டுக் கச்சேரி முதலியவற்றைப் பார்ப்பது தீமைதானா? என்பது போன்ற விவகாரங்களை இங்கே தீர்த்துவிட வேண்டுமென்பது நோக்கமில்லை. சென்ற எத்தனையோ வருஷங்களாக க்ஷ விவாதங்கள் ஒரு விதமான முடிவுக்கு வருமென்று நம்ப இடமில்லாமலிருக்கிறது. ஆனால், ஆசாரத்திருத்தக் கட்சியாரிலே பலர் நமது தேசத்தின் நன்மையையே கருதி பாடுபட்டு வருகிறபடியால் அவர்களிடம் நம்மவர் மிகுந்த அனுதாபம் பாராட்ட வேண்டுமென்பதில் ஆ·க்ஷபமில்லை என்ற போதிலும், இந்தக் கட்சியாரில் சிலர் ராஜாங்க விவகாரங்களிலே தலையிட்டு மிகவும் அசம்பாவிதமான சில விஷயங்கள் சொல்லுகிறார்கள். இந்தச் சிறுபான்மையோரிடம்தான் நமக்கு மிகுந்த கோபமும் வெறுப்பும் ஏற்படுகின்றன. காங்கிரஸ்கள், கான்பரன்ஸўகள் , வேறுவிதமான பொதுக்கூட்டங்கள், பத்திரிகைகள் என்பனவற்றின் மூலமாக எந்த தேசாந்திர, ராஜாங்க சீர்திருத்தங்களின் பொருட்டு பாடுபடுவதெல்லாம் இப்போது வெறும் வீண் முயற்சியென்றும், ஆசாரத் திருத்தக் கூட்டத்தாரின் முயற்சிகள் நிறைவேறியதற்கப்பாலேதான் ராஜாங்க சீர்திருத்தத்தைப் பற்றி மூச்சு விட முடியுமென்றும் வர்கள் சொல்லுகிறார்கள்.
இந்தியாவின் ஜன்ம சத்துருக்களாகிய பல ஆங்கிலேயர்களும் 'வெள்ளை'ப் பத்திரிகைத் தலைவரும் இப்பேதையர் சொல்லுவதற்கு ஒத்துப் பாடுகிறார்கள். ஆனால், நமது ஜன்ம விரோதிகள் மேற்கண்டவாறு போதனை புரிவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. 'இந்தியா தேசத்தாரை உள்நாட்டுச் சச்சரவுகளில் மூட்டிவிட்டு, ஜாதி விவகாரங்களிலும், விதவா விவகாரச் சண்டைகளிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் மண்டைகளை உடைத்துக் கொண்டு கிடக்கட்டும். நாம் பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்போம். எந்த உபாயத்தினாலும் இந்தக் கருப்பு மனிதர்கள் ராஜாங்க அநீதிகளிலே கருத்தைச் செலுத்தாமலிருந்தால் அதுவே போதுமானது' என்பது க்ஷ வெள்ளைப் போதனா மூர்த்திகளின் உத்தேசம். ஆனால், நம்மவர்க்குள்ளும் சிலரிடத்திலே மேற்கூறிய விநோதமான கொள்கையிருப்பது, அறியாமையால் ஏற்பட்டதோ அல்லது மேலே கூறிய வெள்ளை தெய்வங்களின் தயவைச் சம்பாதித்து சுகம் பெற வேண்டுமென்ற ஈன எண்ணத்தினாலோயென்பது செம்மையாக விளங்கவில்லையென்ற போதிலும், ஒரு வேளை வாலிபர்கள் அவ்வாறு கூறுவார்களானால், அது அறியாமையாலென்றும், வயதேறிய மனிதர்கள் கூறும் பக்ஷத்தில் அது அன்னியரின் தயவின் பொருட்டாக வென்றும் ஊகிக்கச் சில காரணங்கள் ருக்கின்றன. இந்தக் கட்சியாரின் அபிப்பிராயங்கள் எவ்வளவு மூத்தனமானவையென்பதை இங்கே சிறிது ஆராய்வோம்.
இந்தத் தேசத்தில் ராஜாங்க சீர்திருத்தவாதிகளின் பொருட்டு மன்றாடுவதற்கு முக்கிய கருவியாகிய காங்கிர√ஸ வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் காங்கிரஸ் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று ஒரே ஸர்க்கார் உத்தியோகஸ்தனிடம் நிருவாக அதிகாரமும், நீதி விசாரணையதிகாரமும் சேர்ந்திருப்பதை எடுத்து விட வேண்டுமென்பதேயாகும். ஜில்லா கலெக்டரிடம் மாஜிஸ்ட்ரேட் அதிகாரம் கொடுத்திருப்பதால் பல கெடுதிகள் உண்டாகின்றன. ஆதலால் அதை எடுத்து விட வேண்டுமென்ற விவகாரத்திற்கும் ஆசாரத் திருத்தத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? வரித் திட்டத்தை ஓயாமல் மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது. ஸ்திரமாக, திட்டமாகச் செய்து விட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியார் வாதிடுகிறார்கள். காட்டிலாகா விதிகளில் சிலவற்றை மாற்ற வேண்டுமென்கிறார்கள். இவற்றைப் போன்ற கலப்பற்ற ராஜாங்க சீர்திருத்தங்கள் எத்தனையோ இருக்கின்றன.பிராமண கன்னிகளையெல்லாம் 10 வயதில் விவாஹம் செய்து கொடுப்பதற்குப் பதிலாக 15 வயதில் விவாஹம் செய்து கொடுக்கும் வரை உப்பு வரியைக் குறைப்பது நியாயமாக மாட்டாதென்றால் தைக் காட்டிலும் மூடத்தனமான கொள்கை வேறு யாதிருக்கின்றது? நாம் சிநேகிதர்களைப் பார்க்கப் போகும் இடத்திற்கெல்லாம் மனைவிமாரையும், பெண்களையும் அழைத்துக் கொண்டு போகவில்லையென்பதற்காகவும், கல்விப் பயிற்சியின் பொருட்டு நமது ஸ்திரீகளை லண்டனுக்கு அனுப்பவில்லை யென்பதற்காகவும், வரித் திட்டத்தை ஸ்திரமாக்காமல் வைத்துக் கொண்டிருப்போரின் மூளை எவ்விதமான மண்ணால் உண்டாக்கப்பட்டிருக்கிறதோ அறியோம். காலம் சென்ற மகானாகிய டபிள்யூ. ஸி. பானர்ஜி சாதாரண ஹிந்து அனுஷ்டானங்களை முற்றிலும் விட்டு விட்டு ஆங்கிலேய நடையுடை பாவனைகளையே கைக்கொண்டு வாழ்ந்தார் என்ற போதிலும், 1892ம் வருஷத்திலே அலாகாபாத்தில் நடந்த காங்கிரஸўக்கும் இவர் ஸபைத் தலைவராக இருந்தபோது ராஜாங்கத் திருத்தத்திற்கும், ஆசாரத் திருத்தங்களுக்கும் திவலை கூட சம்பந்தம் கிடையாதென்பதை மேற்கூறிய திரஷ்டாந்தங்களைக் காட்டி நன்கு விளக்கி இருக்கிறார். இதனால, ஆசாரத் திருத்த முயற்சிகளை எதிர்த்துப் பேச வேண்டுமென்ற நோக்கமே எமக்கில்லை. ஆசாரத் திருத்தங்கள் செய்வதோ, செய்யாமலிருப்பதோ, நமது சொந்த சௌகரியத்தைப் பொறுத்த விஷயம். அதைப் பற்றி அன்னியர்கள் அதிக சிரத்தையெடுத்துக் கொள்ள வேண்டுவதில்லை. ராஜாங்கத்தாரும் அதில் அதிகமாகத் தலையிட வேண்டுவதில்லை. ஜனங்களிடம் தீர்வை வாங்கும் கவர்ன்மெண்டார் ஜனங்களை செம்மையாகவும், கூடியவரை ஜனங்களின் இஷ்டப்படியும் ஆள வேண்டியது அவர்களின் கடமையாகும்.
அப்படியன்றி, ஆசாரத் திருத்தங்கள் நிறைவேறும்வரை ராஜ தந்திரங்களுக்கு இத் தேசத்தார் தகுதியுடையவர்களில்லை என்று சொல்லுவோர் அயோக்கியர்களாகவேனும் அல்லது மூடர்களாகவேனும் இருக்க வேண்டுமென்பதில் ஆ·க்ஷபமே கிடையாது.
நன்றி : இந்தியா பத்திரிகையில் பாரதியார் எழுதிய தலையங்கத்திலிருந்து..

பாரதி சித்தாந்தம்

அறிஞர்களான அரசர்கள் அந்தக் காலத்தில் சிறந்த கவிதை ஒன்றைக் கேட்டதும், அட்சரம் ஒன்றுக்கு லட்சம் பொன் வீதம் இந்தப் பாட்டுக்குப் பரிசு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துப் பொக்கிஷத்தைக் காலி செய்துவிடுவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? அப்படி அட்சர லட்ச வெகுமானம் செய்யலாமென்று எனக்கும் தோன்றியது - பாரதியார் அன்று டாக்டர் சஞ்சீவி என்ற ஒரு நண்பரின் மாளிகையிலே,ஐயமுண்டு பயமில்லை; மனமே!என்ற தொடங்கிக் கமாஸ், மோகனம் முதலிய இராகங்களில் அந்தப் பாட்டைப் பாடிக் காட்டிய போது. அவ்வளவு கவிப் பித்துப் பிடித்துக் கொண்டது- என்னை மட்டுமல்ல, என்னோடு இருந்தவர்களையும்தான்.ஆம், அட்சர லட்சம் கொடுக்க வேண்டியதுதான். ஆகா, வாரும் பிள்ளாய்! மந்திரி! நம்முடைய பொக்கிஷத்திலே... ஓகோ, நாம் கொடைவள்ளல் பாரி இல்லையே! என்றெல்லாம் நான் பகற்கனவு கண்டு கொண்டிருந்தபோது டாக்டர் சஞ்சீவி மடமடவென்று எழுந்து போனார். கைப்பெட்டியைத் திறந்து ஒரு பத்து ரூபாய்த்தாளை எடுத்துக்கொண்டு தடதடவென்று தொந்தி குலுங்க வந்தார். தயை செய்து சிற்றுண்டிச் சாலைக்குப் போய்க் காப்பி சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லிப் பாரதியார் கையிலே அந்த நோட்டைக் கொடுக்கப் போனார். பாரதியார் முகம் பார்த்துக் குறிப்றிந்து செய்த காரியம் இது. எனினும், பாரதியார் வாங்கிக் கொள்ளவில்லை; டாக்டர் திகைத்துப் போனார். டாக்டர் சஞ்சீவிக்குத் தான் ஆயிரக்கணக்காக வருகிறதே; இவ்வளவுதானா கொடுக்கலாம்? என்று என் பக்கத்திலிருந்த நண்பர் ஒருவர் (அவரும் பணக்காரர்தாம்) மெள்ள என் காதோடு காதாய்ச் சொன்னார். ஆனால் டாக்டர் கொடுத்ததை உடனே பாரதியார் பெற்றுக்கொள்ளாததற்குக் காரணம் விரைவில் விளங்கி விட்டது.டாக்டர்! நோட்டைத் தங்கள் உள்ளங்கையிலே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார் பாரதியார். அந்த வேண்டுகோள் ஒரு கட்டளை போல் ஒலித்தது. டாக்டர் சஞ்சீவி திகைத்துப் போய் அப்படியே இரண்டு கைகளையும் விரித்து அந்தத் தாளை வைத்துக்கொண்டு பாரதியாருக்கு எதிரே நின்றார். பிறகு கவிஞர் சிரித்துக் கொண்டே தாளை எடுத்துக்கொண்டார்.அப்பால் பாரதியார் டாக்டரை நோக்கி, தங்கள் கை என் கைக்குமேல் வந்துவிடக் கூடாதென்றுதான் நீங்கள் கொடுக்க வந்ததை நான் முதன் முதல் பெற்றுக்கொள்ளவில்லை! ஒரு கை, தனக்குக் கீழே இரண்ட தரித்திரக் கைகளைத் தாழ வைத்துக்கொடுக்கிறதே, அந்தக் கொடை எனக்குத் தேவையில்லை! இலட்சம் பொன் கோடிப் பொன் கொடுத்தாலும் அந்தக் கொடை வேண்டவே வேண்டாம். அன்போடு கவிஞனுக்குக் கொடுப்பது கவிதா தெய்வத்திற்குப் பக்தியோடு கொடுக்கும் காணிக்கை என்று கம்பீரமாய்ச் சொன்னார். அப்போது அந்த முகத்திலே பெருந்தன்மை - ஏன்? - ஒரு அரச குல மாட்சியே தாண்டவமாடியது.பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வரும் வரை நாங்கள் அந்த நிகழ்ச்சியைக் குறித்தும், அவர் பாடிய பாட்டைக் குறித்தும் வியந்து வியந்து பேசிக்கொண்டிருந்தோம்.ஜயமுண்டு, பயமில்லை; மனமே!என்று ஜோன்புரி இராகத்தில் எடுத்த எடுப்பே பிரமாதமாயிருந்ததது என்றார் ஒருவர். இப்படிப்பட்ட கொள்கையுடையவர் ஒரு வெற்றி வீரன் கப்பம் வாங்குவதுபோல் அந்தக் தாளை வாங்கிக்கொண்டது சரிதானே! என்றார்.அனுபல்லவியைத்தான் எவ்வளவு மோகனமாய்ப் பாடினார் மோகனத்திலே! என்றார் ஒருவர்.புயமுண்டு குன்றத்தைப் போலே என்று வீரச்சுவையுடன் பாடத் தொடங்கியதும், பாரதியார் ஒரு குன்றுபோல் நிமிர்ந்துவிட்டாரே! என்று ஆச்சரியப்பட்டார் ஒருவர்.நியம மெல்லாம் சக்திநினைவன்றிப் பிறிதில்லை;நெறியுண்டு குறியுண்டுகுலசக்தி வெற்றியுண்டு!என்று அந்தச் சரணத்தை முடித்ததும், எங்களுக்கெல்லாம் எங்கேயோ காட்டில் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தது போலவும், திடீரென்று வழி திறந்தது போலவும் தோன்றியது!பாரதியார் அங்கே வருவதற்கு முன் நாங்கள் பொதுவாக நாட்டு நடப்பையும் சிறப்பாகத் திருநெல்வேலித் தல விவகாரங்களையும் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு உற்சாகமாகவே யில்லை; சோர்வு கொடுக்கக் கூடியதாயிருந்தது. ஊரும் நாடும் இருந்த நிலையில் வாழ்க்கை பயனற்ற பாலைவனமாகத் தோன்றியது. அப்போதுதான் பாரதியார் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் கவிதை என்றால் என்ன? அதனால் பயன் என்ன? என்று ஒரு கேள்வி போட்டார் டாக்டர் சஞ்சீவி. பாரதியார் கேள்விக்குப் பதில் சொல்லாமலே ஜயமுண்டு, பயமில்லை என்று பாடத் தொடங்கி,பயனுண்டு பக்தியினாலேஎன்று அனுபல்லவியிலேயே தமது சித்தாந்தத்தை வெளியிடத் தொடங்கிவிட்டார். இருளூடே ஒளி பரவுவது போல் ஐயம் நீங்கித் தெளிவுபட்டு வந்தது, உள்ளத்திற்குள்ளே. எங்களுக்கெல்லாம்.சரணம் பாடும்போது பக்தியின் சக்தி இன்னிசை வெள்ளத்திலே அலையலையாகப் பரவி வந்து எங்களை முழுக்காட்டுவது போலிருந்தது.மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்; - தெய்வவலியுண்டு தீமையைப் போக்கும்விதியுண்டு, தொழிலுக்கு விளைவுண்டு குறைவில்லைவிசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கை கணையுண்டு. (ஜயமுண்டு...)என்று பாடியதும், கமாஸ் ராகமே அப்படி உருவெடுத்து வந்து உறுதி கூறிக் குதூகலம் அளிப்பது போலிருந்தது.இப்படிப் பரம்பொருளை நம்பியிருப்பவர் பொருளை மதிப்பாரா? என்றார் ஒருவர்.என்ன இன்பமான சங்கீதம்! இசையோடு தமிழும், தமிழோடு இசையும் எப்படி இயைந்துவிட்டன! என்றால் எங்கள் கூட்டத்திலிருந்த ஒரு சங்கீத வித்துவான்.சங்கீதம் இருக்கட்டும்; சாகித்தியமே உள்ளத்திலும் - ஏன்? உடம்பிலும்கூட - ஏதோ ஒரு சக்திமயமான மின்சாரத்தை ஏற்றிவிட்டதே என்றார் தமிழஞரும் வக்கீலும் பாரதியாரின் தோழருமான திரு வேதநாயம்பிள்ளை.இப்படியெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வந்தார். வந்ததும், எங்கள் பேச்சை நிறுத்திவிட்டோம். டாக்டர் சஞ்சீவி கவிஞரை நோக்கி, அந்தப் பாட்டை மறுபடியும் கேட்க ஆசைப்படுகறோம்; பாடுவீர்களா? என்று வெகு வினயமாகக் கேட்டார். இந்தத் தடவையும் பாரதியார் பாட்டைக் கமாஸிலேயே பாடிக் கொண்டு வந்தார். ஆனால் ஏதோ ஓர் இராணுவ கீதம் பாடுவது போலத் தோன்றியது. இதைப் பாடிக்கொண்டே எங்கேயோ ஏதோ ஒரு போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று தோன்றுகிறதே! என்றார் டாக்டர் சஞ்சீவி.ஆம்; சோர்வுடன் போர், பயத்துடன் போர்; அவநம்பிக்கையுடன் போர்; மூட நம்பிக்கையுடன் போர்; வறுமையுடன் போர்; செல்வச் செருக்குடன் போர்; தீமையுடன் போர் - இப்படி எத்தனையோ போர்களுக்குப் பட்டாளம் திரட்டி நடத்திக்கொண்டு போகவேண்டியிருக்கிறதே, அதுதான் என் தொழில்! என்றார் பாரதியார்.இப்படிச் சொல்லிவிட்டுக் கடைசிச் சரணத்தை மட்டும் ஏதோ ஒரு புதிய இராகத்திலே,அலைபட்ட கடலுக்கு மேலே, - சக்திஅருளென்னும் தோணியி னாலே,தொலையெட்டிக் கரைவுற்றுத் துயரற்றுவிடுபட்டுத்துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு (ஜயமுண்டு..)என்று பாடி முடித்தார். இந்தக் கடைசிச் சரணத்தைப் பாரதியார் ஏதோ ஒரு பிரெஞ்சு ராணுவகீத முறையைத் தழுவி பாடியதாக அவருடைய மைத்துனர் என்னிடம் சொன்னார்.எங்களுடன் இருந்த சங்கீத வித்துவான், இவர் நாவிலே கலையரசி சாந்த மூர்த்தியாக இல்லாமல் வீர மூர்த்தியாகி விடுகிறாள்! என்று சொன்னார். டாக்டர் சஞ்சீவியோ, எது எப்படியிருந்த போதிலும் பாரதியாரின் சாகித்தியமும் சங்கீதமும் அபார சக்தியோடு என்னைக் கவர்ந்துவிட்டன. இது என்ன இப்னாடிசமோ? என்று அதிசயித்த வண்ணமாயிருந்தார்.தங்களுக்குத் தெரியாத இப்னாடிச மெஸ்மெரிச வித்தையா பாரதியாருக்குத் தெரிந்துவிட்டது? என்றார் திரு. வேதநாயகம் பிள்ளை.தென்னாட்டின் வசிய சாத்திர திலகமென்று வடஇந்தியர் சிலராலும், இந்தியாவின் வசிய சாத்திரியென்று அமெரிக்கர் சிலராலும் அந்நாளில் புகழப்பெற்ற டாக்டர் சஞ்சீவி விசேஷ இலக்கிய உணர்ச்சி உள்ளவரல்லர். கவிதை என்றால் என்ன?அதன் பயன் என்ன? என்று எங்களைப் பல தடவை கேட்டிருக்கிறார். அதே கேள்வியைத்தான் அன்று பாரதியாரையும் கேட்டார்.எங்களோடு எவ்வளவுவோ வாதம் செய்து பார்த்தும் தெளியாத ஐயம் டாக்டர் சஞ்சீவிக்கு அன்று பாரதியாரின் பாட்டைக் கேட்டதும் தெளிந்துவிட்டது. தங்கள் கவிதை என்னையும் வசீகரித்து விட்டதோ! என்று அந்த வசிய சாத்திரி சொன்னதும். பாரதியார் எனக்குத் தெரிந்த வசிய வித்தையெல்லாம்உள்ளத்தில் உண்மையொளிஉண்டாயின் வாக்கினிலேஒலியுண்டாகும்என்பதுதான் என்றார்.பாரதியாரோடு சிற்றுண்டிச்சாலையில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அச்சமயம் எங்களிடம் வந்து, பத்து ரூபாய் செலவு செய்து எங்களுக்கெல்லாம் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார். யாரோ தெரியவில்லை; புதுச்சேரியிலிருந்து வந்தவராமே! ஆகா இவர்தாம்! என்று சொன்னார்.திரு. வேதநாயகம் பிள்ளை பாரதியாரின் பொத்தானில்லாத கோட்டையும் கிழிந்த சட்டையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கண்ணீர் ததும்ப டாக்டர் சஞ்சீவியை நோக்கி இதுதான் இவருடைய வசிய வித்தை என்று சொன்னார்.இப்படிப்பட்ட வசிய வித்தையும் நட்பும் கவிதையும் இருக்கும் போது இந்த உலகம் பாலைவனமன்று; இன்பச் சோலைதான்! நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்தாம் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
நன்றி: பாரதி நான் கண்டதும் கேட்டதும்

பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்


"நான் சென்னையில் இருந்த சமயம் எப்போதாவது பேச்சுநடுவே, “இரண்டும் பெண் குழந்தைகள். கையில் வந்த பிள்ளைக் குழந்தையோ போய்விட்டது” என்று சலித்துக் கொள்வதைப் பாரதி கேட்டுவிட்டால் போதும்; “பெண் குழந்தைகளுக்குத்தான் வாத்ஸல்யம் அதிகம், யதுகிரி. புதுச்சேரியில் விளையாடின நீ என்னை இன்னும் அப்படியே காண்கிறாய். ஆனால் உன் அண்ணன் சாமிக்கு சம்சாரக் கவலை; உன்னைப்போல என்னிடம் பேச ஒழிவதில்லை” என்பார்.
நான் யுகாதிவரை சென்னைப் பட்டிணத்தில் இருந்தேன். பாரதியார் தினம் எங்கள் வீட்டுக்கு வருவார். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா அடிக்கடி வருவார்கள். நாங்களும் அடிக்கடி போவோம்.
சித்திரை மாதம் புறப்படுகிற தினம் காலையில் பாரதி வந்திருந்தார். க்ஷேமலாபங்கள் விசாரித்துவிட்டு, எங்கள் வீட்டு வாசலிலே க்ஷவரம் செய்துகொண்டார். “இன்று க்ஷவரத்துக்கு நாள் நன்றாயில்லை என்று செல்லம்மா தடுத்தாள். அதற்காக இங்கே செய்துகொண்டேன்” என்றார்.
அன்று சாயங்காலம் ஆறு மணிக்கு பாரதி மறுபடி வந்தார். நான் நமஸ்கரித்து, ” எங்கள் ஊர்பக்கம் (பங்களூருக்கு) நீங்கள் வருவதில்லையா?” என்று கேட்டேன். அவர், “எனக்கு பங்களூரில் என்ன அம்மா காரியம்? போய்வா அம்மா. நீ மறுபடி வரும்போது நான் எந்த ஊரில் இருப்பேனோ! உன்னை மறுபடி பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்” என்றார். அதுவே அவரை நான் கண்ட கடைசித் தடவை.
நான் மைசூரில் இருந்தேன். என் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், “பாரதியார் இறந்துவிட்டார்!” என்ற செய்தி இருந்தது. முதலில் நான் நம்பவில்லை. மறுபடியும் என் தகப்பனாரே விவரமாக எழுதியிருந்தார்.
விதி முடிந்துவிட்டது! தமிழ்நாட்டின் அதிருஷ்டம் அவ்வளவுதான்!
1923-ம் வருஷம் நான் மறுபடி சென்னை வந்திருந்தேன். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா மூவரும் என்னை பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை காண எனக்கு வருத்தமாயிருந்தது.
செல்லம்மா, “யதுகிரி, அவர் பிராணன் போகும்முன்கூட, ‘செல்லம்மா, யதுகிரி எங்கே இருக்கிறாள்?’ என விசாரித்தார். நீ மைசூரில் இருப்பதாக சொன்னேன். ‘எவ்வளவு குழந்தைகள்?’ என்று கேட்டார். ‘நம்மைப்போல இரண்டு பெண்கள்’ என்றேன். உன்னைப் பார்க்க வேண்டும்போல இருப்பதாக சொல்லிவிட்டு, ‘அவள் இப்போது எங்கே வருவாள்? எங்காவது நன்றாக இருக்கட்டும்… காலை சமைத்து விடு, எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்கு போகவேணும்” என்றார். இதெல்லாம் சொன்ன ஒரு மணி நேரத்துக்கெல்லாம் உயிர் போய்விட்டது! என்ன செய்வேன்! அதுவும் ஒரு கூத்தாகிவிட்டது…! என்றார்"


- யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” புத்தகத்தில் இருந்து (பக் : 93)
யதுகிரி, புண்ணியம் செய்த ஆத்மா. பாரதியின் பல கவிதைகளை முதலில் கேட்ட செவி இவருடையது. பாரதியின் நண்பரான மாண்டையம் ஸ்ரீ.ஸ்ரீநிவாஸசாரியாரின் மகள் தான் யதுகிரி. பாரதியுடனான தனது அனுபவங்களை இவர் “பாரதி நினைவுகள்” என்ற புத்தகமாக எழுதினார். என் அளவில் செல்லம்மாள் எழுதிய “பாரதி சரித்திரத்தை” விட இது மிக அழகான, முக்கியமான புத்தகமாக படுகிறது. செல்லம்மாளின் புத்தகத்தின் நான் அதுவரை கண்ட கேட்ட பாரதியையே காண முடிந்தது. அதாவது, எழுத்தின் மூலமாக நமக்கு காணக்கிடைக்கும் பிம்பத்தினை சற்றும் குலைக்காத வகையில் எழுதப்பட்ட நூல் செல்லம்மாவின் “பாரதி சரித்திரம்”. ஆனால் யதுகிரியின் “பாரதி நினைவுகள்” அப்படியல்ல. பாரதியை அவனது காவிய உயரத்திலும் சாதாரணத் தளத்திலும் ஒருசேர நிற்கவைக்க முயலும் படைப்பு இது. மேலும் பாரதியின் பல பாடல்கள் உருவான கணத்தையும் பதிவு செய்த புத்தகம்.