இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Tuesday 8 May, 2007

பாரதி 125 - ஞாநி

‘கனக்குஞ் செல்வம் நூறு வயது இரண்டையும் எனக்குத் தா’ என்று தான் தொழுத கடவுளிடம் ஓயாமல் கேட்டவன் பாரதி. இரண்டும் அவனுக்குக் கிட்டவில்லை. கிட்டியது வெறும் 39 வயதும், கடைசி வரை தீராத வறுமையும்தான்!ஆனால், பாரதிக்கு வேறொரு செல்வம் கிட்டியது. கனக்குஞ் செல்வத்தை விடப் பெருஞ்செல்வம்... காலத்தால் அழியாத, காலந்தோறும் வளர்கின்ற புகழ்ச் செல்வம்! பாரதியின் படைப்புகள், பல நூறு வருடங்கள் உயிரோடு வாழ்ந்து, அவன் புகழ்ச் செல்வத்தை பெருக்கிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை!படைப்பின் எந்தப் பிரிவானாலும் செய்யுள், வசன கவிதை, பாட்டு, குட்டிக் கதை, நீண்ட கதை, உருவகக் கதை, கருத்துக் கட்டுரை, பத்திரிகைச் செய்திக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, நாடகம் எனப் பல வகைகளையும் செய்துபார்த்து, முன்னேர் உழுதவன் பாரதி. எனவே, இன்றும் என்றும் படைப்பாளியாக விரும்பும் எவரும் பாரதியைப் பயிலாமல் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ள முடியாது.எப்படி எழுத வேண்டும் என்பதற்கு பாரதி சொன்ன இலக்கணத்தைப் பின்பற்றினால், எளிதில் கருத்தை வெல்லும் எழுத்தாக நம் எழுத்து மலரும். ‘நீ எழுதியதைத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவனுக்கு வாசித்துக் காட்டு. அவனுக்கு விளங்கினதென்றால், நீ சரியாக எழுதியதாக அர்த்தம்’ என்கிறான் பாரதி. எழுதும் முறையையும், எழுத்தின் நோக்கத்தையும் ஒரே சமயத்தில் இது விளக்குகிறது. யாருக்காக எழுதுகிறாய், எப்படி எழுதுகிறாய் என்று வரையறுக்கச் சொல்லும் இன்றைய நவீன தகவல் தொடர்பியலின் சாரத்தையே இந்த அறிவுரையில் காணலாம்.கடந்த 30 ஆண்டுகளில், சோர்வு வரும் தருணங்களில் எல்லாம், பாரதியின் கவிதையையோ கட்டுரையையோதான் நான் எடுத்து வைத்துக்கொள்கிறேன். சிறிது நேரம் பாரதியில் தோய்ந்ததும்,சோர்வுகள் நீங்கி மீண்டும் உற்சாகம் என்னைப் பற்றிக்கொள்ளும்.ஓவியனாக வேண்டும் என்பது என் இளம் பருவக் கனவுகளில் ஒன்று. எல்லா பிரபல ஓவியர்களின் படங்களையும் பார்த்து அதுபோல வரைந்து முயற்சித்துப் பழகியதில், சொந்தமாக வரையும் கற்பனைத் திறன் முடங்கிவிட்டது. ஆனால், இன்றும் ஓவிய னாக நான் என்னைப் பற்றிப் பெருமைப்படும் ஒரே ஓவியம், 1982 ல் பாரதி நூற்றாண்டுக்குப் பின் சொந்தமாக பத்திரிகை தொடங்க முயற்சித்தபோது, அதன் சின்னமாக நான் வரைந்த பாரதி ஓவியம் தான்.எங்கள் வீட்டுப் பிள்ளையார் பூஜைகளில், பாரதியின் ‘விநாயகர் நான்மணி மாலை’யைத்தான் நான் சிறுவனாக இருந்தபோது படித்து, மலர் தூவுவேன். அதுதான் என்னை நாத்திகத்தை நோக்கி நகர்த்தியது. காரணம், ஆன்மிகவாதியான பாரதியின் கடவுள், மத குருமார்கள் சொல்லும் கடவுளிலிருந்து வேறாக இருந்தார். கடவுளைத் தன் நண்பனாக்கி, கடவுளுக்கு உத்தரவுகள் போடுபவராக இருந்தார். பாரதியின் ஆன்மிகமும், வள்ளலாரின் ஆன்மிகமும், நாத்திகர்களின் மனித நேயமும் ஒன்றேதான் என்று உணர்த்தியது பாரதியின் ‘சரஸ்வதி வணக்கம்’.உலகத்தில் வேறு எந்தச் சமுதாயத்திலும், பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுக்கு நிகரான ஆளுமை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட பாரதியின் 125 ம் ஆண்டை நாம் எப்படிக் கொண்டாட வேண்டும்?இன்று நம் சமூகத்தில் மூன்று முக்கிய எழுச்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று, மகளிர் எழுச்சி. அடுத்தது, தலித் எழுச்சி. மூன்றாவது, மத அடிப்படைவாத எழுச்சி. முதல் இரண்டும் காலத்தின் கட்டாயம். மூன்றாவது, கடிகாரத்தைத் திருப்பிவைக்கும் முயற்சி.இந்த மூன்று எழுச்சிகள் தொடர்பாகவும் பாரதியிடமிருந்து நாம் அறிய ஏராளமாக உள்ளன. சக ஆண்களிடம் உறவு காரணமாக அன்பு காட்டவேண்டிய நிலையில் இருக்கும் பெண், அதே ஆண்களிடம் தனக்கான நீதியைப் பெறுவது எப்படி என்பதுதான் இன்றும் தொடரும் மயக்கம். பாரதி இந்த மயக்கத்துக்கு மருந்துகள் சொல்லி இருக்கிறான்.தலித் எழுச்சி என்பது, சாதி அமைப்பை ஒழிப்பதற்கான நீண்ட நெடிய போராட் டத்தின் இன்னொரு கட்டம். எல்லாச் சாதிகளும் சம அந்தஸ்தைப் பெறுவது என்பது இதில் ஒரு படி. அதை அடைந்த பின், சாதிகள் இல்லாமல் ஆக்குவது அடுத்த படி. எல்லாரும் பூணூல் அணிந்து சமமான உயரத்தை அடையட்டும் என்று ஒரு தலித் இளைஞருக்குப் பூணூல் அணி விக்கிறான் பாரதி. நோக்கம், சமத்துவம் தானேயன்றி பூணூல் அல்ல! எல்லாருக் கும் பூணூல் அணிவிப்பது என்பது நூறாண்டுகளுக்கு முந்தைய சமூகத்தின் மறுமலர்ச்சியாளர்களுக்குத் தோன்றிய தீர்வு. யாருமே அணிய வேண்டாமே என்ற மறுபக்க சிந்தனை, அடுத்த தலைமுறை மறுமலர்ச்சியாளர்களின் தீர்வு. இரண்டிலும் நோக்கம், சாதிகளின் சமத்துவம்தான்!சாதி ஒழிய சமத்துவம் மட்டுமல்ல, அக மண முறை சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் முறை அகற்றப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். அதே கருத்தை பாரதி பல இடங்களில், சாதிகள் தமக்குள் வேறுபாடுகளை மறந்து கலத்தல் வேண்டும் என்று வலியுறுத்து கிறான்.பாரதி வாழ்ந்த காலத்திலேயே நாற்று நடப்பட்டு, இன்று விஷ விருட்சமாக வளர்ந்திருப்பது மத அடிப் படைவாதம். அதற்கு எதிரானவன் பாரதி என்பதற்கு அவனுடைய ஏராளமான கட்டுரைகளில் ஆதாரங்கள் உண்டு. குறிப்பாக, இஸ்லாம் பற்றிய பாரதியின் நேசக் கருத்துக்கள், மதம் என் பதைக் கடந்து மானுடம் என்ற வள்ளலார் பார்வையின் தொடர்ச்சியாக ஒலிக்கின்றன.மனித மனங்களை அன்பால் தான் வெல்லவேண்டும், அன்பால்தான் சமத்துவம் வரும் என்பதில் ஆழமான நம்பிக்கை பாரதிக்கு இருக்கிறது. இந்த அன்பை வளர்க்கும் அறிவை வளர்ப்பதுதான் பாரதியின் சாரம்.இதையெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே தொடங்க வேண்டும். வயது முதிர்ந்த மனங்களை மாற்ற முடியாது. இதுவும் பாரதியின் நம்பிக்கை. அதனால்தான் புதிய ஆத்திசூடி முதல் ஆரம்பக் கல்விக்கான சிலபஸ் வரை பாரதியின் மூளையும் பேனாவும் இயங்கியிருக்கின்றன.பாரதியை தமிழ்ச் சமூகம் இன்னமும் முழுமையாக உணரவில்லை. யானையைக் கண்ட குருடர்கள் போலத்தான் இருக்கிறது. எனவே, நமது கொண்டாட்டங்களும் அப்படிப் பட்டவை ஆகிவிடுகின்றன. ‘பாரதி 125’ ஐ எப்படிக் கொண்டாடுவது? இன்னமும் பரவலாக அறியப்படாத பாரதியின் உரைநடைகளை பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளில் எல்லாம் இளைய தலை முறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கவிஞன், பத்திரிகையாளன் என்று மட்டும் பாரதி அறிமுகம் செய்யப்படலாகாது. காந்தியைப் போல, நேருவைப் போல, பெரியாரைப் போல, அம்பேத் கரைப் போல சமூக மாற்றத்துக்காக, மனித சமத்துவத்துக்காக முயற் சித்த சிந்தனையாளன் பாரதி. மற்றவர்கள் இயக்கம் கட்டினார்கள். பாரதியின் சூழலில், அவனே ஒரு நபர் இயக்க மாக இயங்கினான்.இந்தி ‘முன்னாபாய்’ சினிமா, காந்தியை இளம் ஜீன்ஸ் தலைமுறைக்கு நெருக்கமானவராக ஆக்கியது போல, எல்லாத் தளைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகி நிற்க மானு டத்தைக் கூவி அழைக்கும் பாரதியை ‘நம்ம ஆளு’ என்று இன்றைய இளை ஞர்களை உணரச் செய்யும் முயற்சிகளில் சக படைப்பாளிகள், கலை ஞர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் இறங்க வேண்டும்!

பாரதி தரிசனம் - கற்பக விநாயகம்

ரிசல் சீமையில் உதித்த குறிப்பிடத்தகுந்த ஆட்களில் ஒருவரான பாரதியார் முதன்முதலில் எனக்கு அறிமுகமானது 'ஓடி விளையாடு பாப்பா ' பாடல் மூலம்தான். அதில் சின்னஞ்சிறு குழந்தைக்கே கூட 'சாதிகள் இல்லையடி பாப்பா ' என்று அழகாய்ச் சொல்லி இருப்பார் அவர்.
பின்னாளில் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலும், பின் அவரின் கவிதை, கட்டுரை, சிறுகதை நூல்களிலும் மனதைப் பறிகொடுத்த காலமும் இருந்தது. அவரின் சொல்லிலும் செயலிலும் முற்போக்கைத் தரிசித்தபடி இருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன், ராம கோபாலன் போன்ற இந்து மத வெறி பரப்பும் ஆட்களும், 'பாரதியின் பாடல்களைப் படித்த பிறகே தாம் ஆர் எஸ் எஸ் இல் சேர்ந்ததாக 'ச் சொன்னார்கள். திருவல்லிக்கேணி பாரதியார் வீட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்கள் நடத்திய பாரதி விழாவில் புகுந்து, ராம கோபாலனின் ஆட்களான இந்து முன்னணியினர் தாக்குதல் தொடுத்தபோதுதான், எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின.
உண்மையில் பாரதி யார் ?
வே.மதிமாறன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் 'தலித் முரசு ' பத்திரிக்கையில் 'பாரதி ய ஜனதா பார்ட்டி ' எனும் தொடரை எழுதத் தொடங்கினார். அத்தொடர், எனக்குள் இருந்த பாரதி பற்றிய பிம்பத்தை மாற்றி அமைத்து விட்டது.
அது வரை 'பாரதி நாம சங்கேர்த்தனம்! கோவிந்தா! கோவிந்தா! ' எனப் பஜனை பாடிக்கொண்டிருந்த சி பி ஐ / சி பி எம் / தேசியம் / அழகியலை மட்டும் எழுதிச் செல்லும் 'அக மன உழைச்சல் ' கவிஞர்கள் / இந்து தேசியவாதிகள் எவரிடம் இருந்தும் அத்தொடருக்கோ / அத்தொடர் நூலான பிறகோ 'உருப்படியான ' மறுப்பு எதுவும் வரவே இல்லை. எல்லா பாரதி பக்தர்களும் 'கள்ள மவுனம் ' அனுசரித்தார்கள்.
சமீபத்தில் வாலாஜா வல்லவன் எனும் எழுத்தாளர் 'திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதி ' எனும் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நூல் இதுவரை நடந்த பாரதி ஆய்வுகளிலேயே ஆகச் சிறந்ததாய் ஆதாரங்களுடனும், பாரதியின் சம கால வரலாற்று அறிவுடனும் எழுதப்பட்டுள்ளது. அந்நூல் பாரதியின் பன்முக ஆளுமைகள் பலவற்றையும் ஆழ ஆராய்கின்றது. எனது இந்தக் கட்டுரையில் உள்ள பல ஆதாரங்கள் வாலாஜா வல்லவனின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
'பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் ' என்று மற்றும் ஓர் பாரதி ஆய்வு நூல் (எழுதியவர்கள்: வே.மதிமாறன் & மருதய்யன்) தற்போது வெளிவந்துள்ளது. அந்நூலில் இருந்தும் சில ஆதாரங்களை இக்கட்டுரையில் எடுத்தாண்டுள்ளேன்.
****
பாரதி பற்றிய புனிதச் சித்திரம் எல்லோர் மனதிலும் பள்ளிப்பருவத்தில் இருந்து மகாகவி என்றும் தேசியக் கவி என்றும் ஏற்றப்பட்டுள்ளது.
கல்கி, வ.ரா. காலத்தில் பாரதி மகா கவியா ? தேசியக்கவியா ? எனும் மயிர் பிளக்கும் வாதத்தில் இறங்கியுள்ளனர்.
அவரை விமர்சனம் செய்வதையே நிறையப்பேரால் நினைத்துக்கூடப் பார்க்க முடிந்ததில்லை. கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமியிடம் சொன்னாராம்- 'பாரதி,கம்பன் ஆகியோரைப் பழித்துப் பேசுபவர் வீட்டில் கை நனைக்க மாட்டேன் '.
ஜீவாவால் கண்மூடித்தனமாய் பாரதி பஜனை ஆரம்பித்து வைக்கப்பட்டு அம்மரபு இன்று வரை தொடர்கிறது சிபிஐ சிபிஎம் அணியில்.
கம்யூனிஸ்ட்களும், இந்துத்துவவாதிகளும், காந்தியவாதிகளும் சேர்ந்து மாரடித்ததால் பாரதி பற்றிய புனிதர் பிம்பம் நம் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது.
****
அவர் வளர்த்த முறுக்கு மீசைக்குக் கூட ஒரு முற்போக்கு இமேஜை, வெண்ணெய் வெட்டி சிப்பாய்கள் உருவாக்கி இருந்தனர்.
பிராமணர்கள் பொதுவாய் முகம் முழுக்க மயிர் நீக்கல் வழக்கமாய் இருக்க, அதை மீறி பாரதியார் வீரத்தின் அடையாளமாய் மீசை வளர்த்தார் எனும் முற்போக்கு வாதம் இது.
விசயம் என்ன என்றால் அது சுவாரசியமானது. பாரதியே அவரின் கட்டுரை ஒன்றில் சொல்கிறார். காசியில் தன் அத்தை வீட்டில் இருந்து கொண்டு, ஜய நாராயண கலாசாலை எனும் பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்த காலத்தில், தினமும் முகம் மழிப்பாராம். அவருடன் இருந்த பள்ளித் தோழர்களுக்கு இது விநோதமாய் இருந்துள்ளது. வட இந்திய பிராமண நண்பர் ஒருவர் கேட்டே விட்டாராம் 'உங்க வீட்டிலே தினமும் யாராவது இறந்து விடுகிறார்களா ? ' என்று. பாரதிக்கு விளங்கவில்லை. நண்பர் விளக்கினாராம். பிராமணர்கள், தம் வீட்டில் இழவு விழுந்தால் மட்டுமே முகம் மழிப்பர் என்றாராம். பாரதியும், அன்றிலிருந்து மழிப்பதை விட்டு விட்டு, அசல் ஆரிய வர்த்தப் பிராமணராக மாறியதுதான் இந்த மீசை விவகாரம். (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்)
****
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உடன்கட்டை ஏறுதலை எதிர்த்து சமூக சீர்திருத்தவாதிகள் குரல் கொடுத்துள்ளனர். ஆங்கில அரசும் இதைத் தடுக்கச் சட்டம் போட்டுள்ளது. ஆனால் நம் பாரதியோ 'சதி 'யை ஆதரித்து 1910 பிப்ரவரியில் 'கர்ம யோகி ' இதழில் எழுதுகிறார் - ' நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள் '.
பெண் விடுதலையை என்னமாய்ப் பொளந்து கட்டியிருக்காரு. எரித்துப் போட்டு ஆவி 'விட்டு விடுதலையாகி ' சிட்டுக்குருவி போலப் பறத்தலையே ஒரு வேளை பெண்ணின் விடுதலை என்றிருப்பாரோ தெரியவில்லை!
சரி கிடக்கட்டும் இது ரொம்பப் பழசான விஷயம்.. இப்போல்லாம் அப்படி இருக்க மாட்டாங்க இந்துக்கள் என்று நினைத்தால் அந்த நினைப்பிலும் மண்ணைப் போட்டு விட்டது..அக்டோபர் 28, 1987ல் ஜெய்ப்பூரில் 'தர்ம ரக்ஷ சமிதி ' என்ற அமைப்பின் தலைமையில் மாபெரும் 'சதி ஆதரவு ஊர்வலம்.
(அதே 1987ல் செப்டெம்பர் 4ல் ராஜஸ்தானில் தியோலாரா கிராமத்தில் ரூப் கன்வர், தனது கணவனின் பிணத்துடன் உயிருடன் வைத்து எரிக்கப்பட்டார்).
சரி.. தர்ம ரக்ஷ சமிதி என்பது எங்கோ இருக்கும் ராஜஸ்தான் காரங்களோடதுதானே என ஆறுதலும் பட முடியவில்லை. ஏன் எனில், இதே அமைப்பின் தமிழகப் பிரிவிற்கும் ஆட்கள் இருந்தாங்க..பத்மா சுப்பிரமணியம் எனும் நாட்டியப் பேரொளியும், சங்கராச்சாரியாரும்தான் அவர்கள். அந்த சதி ஊர்வலத்தில் ரூப்கன்வரை, சீதை, அனுசூயா போன்ற சதி மாதாக்களோடு ஒப்பிட்டும், சதியை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த சதி ஆதரவு அமைப்புக்கே மூல வேர், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவரான ஆச்சாரிய தர்மேந்திராதான்.
தற்போதைய ராஜஸ்தான் முதல்வரின் அம்மா, விஜயராஜே சிந்தியா (இவர் பி ஜே பி யில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்) 'உடன்கட்டை ஏறுவது கற்புடைய பெண்டிரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது ' என்று சொன்னார். எம் ஜி ஆர் இறந்தபோது ஜெயலலிதாவும் தனது உடன்கட்டை ஆசையை வெளிப்படுத்தியவர்தான்.
இந்து மதத்தின் பிற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்றிணையும் இடமான 'சதி ' பஜனையில் பாரதியும் சேர்கிறார்.
****
பாரதி, தன் சுய சாதி அபிமானமும், அதன் மேன்மை சரிவதால் மனம் நொந்தும் இருந்தவர்தான், என்பதை அவர் எழுத்துக்கள் பல சாட்சியாய் உள்ளன.
1910ல் தமது சுயசரிதையில் தன் தந்தையைப் பற்றி எழுதுகிறார் 'பார்ப்பனக்குலம் கெட்டழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால் வேர்ப்பப் பொருள் செய்வதொன்றையே மேன்மை கொண்ட தொழில் எனக்கண்டனன் '.
பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என மனுதர்மம் சொல்லி இருக்கிறது. ஆனால் தந்தையோ உடல் வேர்க்க வேலை செய்ய நேர்ந்ததே என நொந்து கொள்ளும் சாதியபிமானம் குறிப்பிடத்தக்கது.
'கண்ணன் என் தந்தை ' பாடலில் 'நாலு குலங்கள் அமைத்தான்- அதை நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர் ' என்று நான்கு வர்ணங்கள் சிதைவதை ரொம்ப வருத்தப்பட்டு எழுதுகிறார்.
'கடல் மேல் வருணாசிரமப் பாலம் ' என்ற கட்டுரையில் பாரதி 'குலத்தளவே ஆகுமாம் குணம் ' என்பதோடு 'அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்ளுகிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை ' என்று அவர் சொல்லும் இடத்தில்தான் குலக்கல்வி கொண்டு வந்த ராஜகோபாலாச்சாரியும், அதனை ஆதரித்து எழுதும் ம.ம.வும் ஒன்றிணைகிறார்கள்.
டாக்டர் டி எம் நாயர் 1917ல் சென்னை ஸ்பர்டேங்க் இல் (சேத்துப்பட்டில் உள்ள குளக்கரை) நடைபெற்ற பஞ்சமர் மாநாட்டில் பார்ப்பனர்களைக் கடுமையாய் விமர்சனம் செய்து பேசினார். பாரதிக்குக் கோபம் கொப்பளித்தது. 'சென்னைப் பட்டிணத்தில் நாயர், கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம் ', 'என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக்கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப்பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! ' எனக் கோபத்தில் புலம்புகிறார்.
****
பாரதியார், பிரிட்டிஷ் போலீசாரின் கைதில் இருந்து தப்பிட பாண்டிச்சேரிக்குப் போய் நீண்ட காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை மாகாணத்துள் திரும்பும் வேளையில் திருப்பாதிரிப்புலியூரில் வைத்துக் கைது செய்யப்பட்டுக் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாரதியார், 'தமக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பெல்லாம் கிடையாதென்றும், சென்னை மாகாணத்துக்குள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்கப் போவதாயும், ஆங்கிலேயப் பேரரசர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்தித்து ' ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு கடலூர் சிறையின் 25 நாட்களை எண்ணியபடியே விடுதலை வாங்கித் தர உதவியவர்களில், சர் சி பி ராமசாமி அய்யர் முன்னணியில் இருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக அறியப்படும் பாரதி, சரணடைந்த நபர், ஆங்கிலேயருக்குப் பெரிய அளவில் விசுவாசம் கொண்டு அவ்விசுவாசத்திற்காக 'சர் ' பட்டம் வாங்கியவர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.(அய்யரின் மற்ற செய்திகள் எனது பிற கட்டுரைகளில் பதிவாயுள்ளன. (1) கல்பாத்தித் தெருக்களில் பஞ்சமர் நடக்கக்கூடாது எனும் செயலை ஆதரித்தமை 2) கே. ஆர். நாராயணனுக்கு அரசு வேலை கிடைக்க விடாமல் செய்த தந்திரங்கள்)
****
இன்று பாரதம் முழுக்க ஒரே பண்பாடு என்பதை லட்சியமாகக் கொண்டு, பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்க முனையும் ஆர் எஸ் எஸ் ஸிற்கு முன்னோட்டமாக, தலித் பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் பாரதி, 'எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும் ' என்று சொல்லி இருக்கிறார்.
இதே மாதிரியான வேலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் தற்போது இறங்கி இருப்பதை புதுவை சரவணன் எனும் இந்துத்துவவாதி திண்ணையில் அனைவருக்கும் சமஸ்கிருதம் கற்றுத்தருவதாகவும், புதிதாய் 20000 பேர் சம்ஸ்கிருதத்தில் பேசுவதாகவும் சொல்லி இருந்தார்.
பாரதி சொன்ன 'பூணூல் புரச்சி 'யும் இப்படித்தான். மேல் சாதிக்காரனிடம் உதை வாங்க, பூணூல் மாட்டினால் என்ன ? மாட்டாட்டி என்ன ?
தலித் மக்கள் மதம் மாறிவிடக்கூடாது என்பதில் குறியாய் 'அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள்! மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டியார்களே! இந்த விசயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்! ' என்று தலித்களுக்கு 'விபூதி ' நாமம் சாத்த அலையாய் அலைந்திருகிறார் பாரதி. மதத்தை மாற்றிக்கொள்ளாமல் இருக்க லஞ்சம் கொடுத்தாவது சரிக்கட்ட யோசனை சொல்லி இருக்கிறார். இயற்கை சதி செய்து விட்டதால் 1921லேயே இறந்து விட்டார். அவர் சென்று ஐக்கியமாக வேண்டிய ஆர் எஸ் எஸ் ஆரம்பிக்க இன்னும் 4 ஆண்டுகள் இருந்தன.
அதே நேரத்தில், மாட்டுக்கறி தின்பதால் தலித்கள் ஒதுக்கப்பட்டதை நியாயம் என்றும் சொல்லி இருக்கிறார் பாரதி. 'ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள்.ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பதைக்கண்டு ஜாதிப்பொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம் ' (ஆதாரம்:- சோசலிசக்கருத்துகளும்,பாரதியும், கோ.கேசவன்)
****
பாரதி 'சந்திரிகையின் கதை ' யில் மனு நீதியை ஆதாரம் காட்டி, பார்ப்பனர்கள் எந்த சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்று எழுதி உள்ளார். ஆனால் பார்ப்பனப் பெண்களைப் பிற சாதியில் திருமணம் செய்விக்கப் பாரதி எதிர்ப்பாகவே இருந்துள்ளார் என்பதைப் பின்வரும் சான்று மூலம் அறியலாம். (மனு தர்மமும் அதைத்தானே சொன்னது. பிராமண ஆண் எந்த வர்ணத்துப் பெண்ணுடனும் உறவு கொள்ளலாம். ஆனால் பிராமணப் பெண்ணுக்கு இது பொருந்தாது)
'பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் பாரதியும், நாராயணப்பிள்ளையும் கலப்புத்திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். திடாரென்று நாராயணப்பிள்ளை, பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால்தான் என்ன ? என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்விக்க வேண்டியது. அதன் பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம் ' என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி, 'விடுவிடு ' என்று தம் வீடு போய்ச்சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.
நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கவும் ஊரார் பயப்படுவார்கள்.மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தம் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம்,லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.
வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம் ' உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால்தானே நாராயணப்பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று ' என்று சொல்லி, அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார். அர்ச்சகர் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப்பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி, பாரதியின் மைத்துனர் அப்பாதுரையை வரச்சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியைக் கடயத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் நாராயணப்பிள்ளை.
பாரதி வீட்டில் ஒரே குழப்பம்.கலக்கம்.முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத்தீர்மானித்தார்கள்.விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை
முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள். இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது. ' (சித்திர பாரதி, ரா.அ.பத்மநாபன்,பக்கம் 164)
பாரதி சொன்ன 'சாதிகள் இல்லையடி பாப்பா ' வெறும் பாட்டு மட்டும்தானா ?
****
நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு தமிழ் நாட்டில் அக்கட்சியில் மட்டுமன்றி காங்கிரசுக் கட்சியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முழக்கம் சமூக நீதிக்காக முன் வைக்கப்பட்ட சூழல் அது. சமூக நீதியை விரும்பும் அனைவரும் பெரியார் முதல் வ.உ.சி. வரை ஒரே குரலில் ஒலித்தபோது, பாரதியார் 1921 சனவரி 19ல் சுதேசமித்திரனில் ' வகுப்புவாரிப்பிரதி நிதித்துவம் முறையை ஒழித்துவிட வேண்டும். அது வெறும் சதி, ஏமாற்றென்பது ருஸூவாய் விட்டது.பிராமணரல்லாதாருக்குத் தனியாக ஸ்தானங்கள் ஏற்படுத்தியது புத்தியில்லாத குழந்தை விளையாட்டனறி மற்றில்லை ' எழுதியுள்ளார்.
பாரதி வகுப்புரிமையை எதிர்த்த காரணம் அது பார்ப்பனர்களுக்குப் பாதகமாக இருந்தது என்பதால்தான். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த காலத்தில் வகுப்புரிமையை எதிர்த்ததாகச் சிலர் சொல்வது தவறு. இதை எழுதும் முன்பே கடலூர் ஜெயிலில் கவர்னருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு, தீவிர வருணாசிரம ஆதரவாளராக விளங்கினார்.
ஆனால் இவரை விட மிகத்தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான வ.உ.சி. 1920லேயே வகுப்புரிமையை ஆதரித்து திருநெல்வேலி காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்தார். அது வருமாறு: 'இந்த மாநிலத்தில் நிலவும் தற்போதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு பொது வேலைகளிலும், கெளரவ உத்தியோகங்களிலும் பிராமணர், பிராமணரல்லாத சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் ' (இந்து 25/6/1920)
****
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 13/4/1919ல். அந்நேரத்தில் பாரதி ஆங்கில ஆட்சிக்கு மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, ஆங்கில அரசின் விருப்பப்படி கடயத்தில் வசித்து வந்தார். (மன்னிப்புக் கடிதம் கொடுத்து ஏகாதிபத்தியத்திடம் சரணடைவதில் பாரதியும், வீர சாவர்க்கருக்கு சளைத்தவரல்லர்).
'நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திரமும் இன்றி வஞ்சனை செய்வாரடி ' என காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி, இப்படுகொலை நடந்தபோது 'அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு ' கடையம் ஊரில் பேனாவுக்கு மையில்லாமல் இருந்த கதை என்ன ?
ஆனால் வ.உ.சி. இக்கொலையை வன்மையாகக் கண்டித்துள்ளார். அன்னிபெசண்ட் இதை ஆதரித்து 'செங்கல்லால் அடித்தவர்களை, இரும்புக்குண்டால் அடித்தார்கள். இதிலென்ன தவறு ? ' எனறு கேட்டவர். இவ்வாறு கேட்ட அன்னிபெசண்டின் ஹோம்ரூல் இயக்கம், பார்ப்பனர் நலனுக்கு ஆதரவாய் இருக்கவே, பாரதியும் திலகரும் இவ்வியக்கத்தினை ஆதரித்தனர். ஆனால் வ.உ.சி.தான் இந்த அம்மாள், ஆங்கிலேயரின் கையாள் என்பதைப்புரிந்து கொண்டு, அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதி உள்ளார்.
****
காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தை சத்திய மூர்த்தி அய்யர் எதிர்த்தார். சட்டசபையைப் புறக்கணித்தல் எனும் இந்த ஒத்துழையாமையைப் பாரதியும் எதிர்த்து 'பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை ' என எழுதிய அதே காலகட்டத்தில்தான், பெரியார் காங்கிரசில் சேருகிறார். அவர் ஈரோடு நகரசபைத் தலைவர் பதவியைத் துறந்தார். நீதிமன்றத்தினைப் புறக்கணித்த காரணத்தால், வியாபாரத்தில் அவருக்கு வந்து சேர வேண்டிய ரூ50,000 (1919ல் இது மிகப்பெரும் தொகை)ஐ இழந்தார். வக்கீல் சேலம் விஜயராகவாச்சாரியார் 'வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக்கொடும். நான் இனாமாகவே வாதாடிப் பணத்தை வசூலித்துத்தருகிறேன் ' என்று பெரியாரிடம் சொன்னபோது பெரியார் சொன்னது 'அது நெறியற்ற செயல் '.
பாரதியின் ஒத்துழையாமை எதிர்ப்பைப் பிரதிபலித்த இந்து பத்திரிக்கை தெளிவாய் அதன் சாதி நலனை விளக்கி எழுதியது 'கல்வி, நீதிமன்றம், சட்ட மன்றம் ஆகியவற்றைப் புறக்கணித்தால் அதிகாரம் பார்ப்பனரல்லாதோர் கைக்குப் போய் விடும் '.
****
பாரதியிடம் கம்யூனிசத்தைத் தொட்டுத் தடவி உச்சி மோந்து கொண்டாடும் சிபிஐ, சிபிஎம் அணியினருக்கு, அவர் உண்மையிலேயே ரஷ்யாவில் நடந்த 1917 பிப்ரவரி புரட்சியைத்தான் பாடினார் என்பதும், லெனினின் 1917 அக்டோபர் புரட்சியைப் பாடவில்லை என்பதும் தெரியாதா என்ன ?
லெனின் தலைமையில் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்து, நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டபோது, 'இந்த முறைமை பலாத்காரங்களின் மூலமாக உலகில் பரவி வருவது எனக்கு ஸம்மதமில்லை ' என்று பாரதி கண்டித்ததோடு லெனினைத் திட்டி 'கொலையாலும், கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன் ' என்கிறார். புரட்சித்தலைவர் லெனினை மூடன் என்று சொன்னால்தான் என்ன ? நமக்குத்தான் சீட்டுத் தர நம்ம ஊரின் புரட்சித்தலைவர் இருக்கிறாரே என்று இந்தப் பஜனை மண்டலிகள் சமாதானம் அடைந்திருக்கலாம்.
'உழுபவனுக்கே நிலம் சொந்தம் ', என இயக்கம் நடத்தியவர்களுக்கு பாரதி 1921ல், சென்னை மாகாண நிலப்பிரபுக்களுக்கு அரசு நிலத்தீர்வையைக் கூட்டியவுடனே 'இது லெனினுடைய கொள்கையில்தான் போய் முடியும், பூஸ்திதிகளை (நிலங்களை) எல்லாம் பறித்துக்கொண்டு உடையவரைத் தெருவில் விட வேண்டும் என்ற கொள்கை ' என்று எழுதியது தெரியாதா என்ன ?
****
பாரதி எழுதுகிறார் 'திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல், யாதொரு சண்டையுமின்றி, தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான் '.
ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, பார்ப்பனர்களை ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது.
திப்புவின் ஆட்சியில் அரசுப்பணியில் இருந்த பார்ப்பனர்கள், தவறு செய்தால் கூட அவர்களைத் தண்டிக்கும் உரிமையை திப்பு ஏற்காமல், அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான்.
1791ல் திப்பு சிருங்கேரி மடத்துக்கு எழுதிய கடிதம் இதோ:
'There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offene like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. '
இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க சாஸ்தரா சண்டி ஜெபம் நடத்த, திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள்,40 நாட்கள் ஜெபம் செய்தனர். முழுச்செலவையும் திப்பு ஏற்றுக்கொண்டான்.
பாரதிக்கு இஸ்லாமியர் மீது இருந்த வெறுப்பின் அடையாளமே மேற்கண்ட அவதூறு எழுத்து.
இவ்வெறுப்பின் உச்சத்தை 'சிவாஜி தன் சைனியத்துக்குக் கூறியது ' பாடலில் பரக்கக் காணலாம்.
****
கிறிஸ்தவ மதத்தை அவதூறு செய்வதில் பாரதி, ம.ம.வுக்கெல்லாம் தாத்தாவாக விளங்கினார்.
'சாதிக்கொடுமையில் இருந்து விட்டால் போதும் சாமி ' என்று தலித்கள் வேதக்கோவிலுக்கு ஓடிக் கொண்டிருந்தது, பாரதியால் ஜீரணிக்கவே முடியாமல் இருந்துள்ளது. பேனாவைத் தூக்கி 'ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப்படுவேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை ' என்று சாதிக்கொடுமையை ஜாக்கி வைத்துத் தூக்கிப் பிடித்து, 'இப்போது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களை யெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கும் கோடாலியாக இருக்கும் ' என்று எழுதுவது, மகாகவி பாரதியார்.
சில நண்பர்கள் நினைக்கக்கூடும், அவர் ஆரம்பத்தில் நல்ல முற்போக்காத்தான் இருந்தார். பாண்டிச்சேரி போய் வ.வே.சு. அய்யர் சகவாசத்தினாலே இப்படிக் கெட்டுப் போயுட்டார் என்பர். (வ.வே.சு. அய்யர் சேரன்மாதேவியில் நடத்திய தனிப்பந்தி ஆசிரம விவகாரத்தை என்னுடைய 'வரலாற்றை எழுதுவதை முன் வைத்து ' கட்டுரையில் காண்க). இருக்கலாம். முன்னிலும் தீவிர இந்துத்துவவாதியாய் அய்யரின் சகவாசம் மாற்றியிருக்கலாம். பாண்டிச்சேரி போகும் முன்பும் பாரதியிடம் பிற்போக்குத்தனம் குடி இருந்தது என்பதை 18/8/1906 இல் அவர் 'இந்தியா ' பத்திரிக்கையில் 'மிசன் பள்ளிகளை விலக்கி வைத்தல் ' எனும் கட்டுரை தெளிவாக்குகின்றது.
அதில் அவர் 'கிறித்தவ மிசன் பள்ளிகளில் படிப்பவர்கள், இந்து மதக் கடவுள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டார்கள்- அதனால் அவர்களுக்கு தேசபக்தி வராது. அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறி விடுவார்கள் ' என்று எழுதி உள்ளார்.
1909ல் இஸ்லாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் எனும் பொருள்பட கார்ட்டூன் போட்டுள்ளார்.
****
வேதத்தையும், சமஸ்கிருதத்தையும் தூக்கிப்பிடித்த பாரதியிடம் இருந்து 'அவர் ஏன் வள்ளலாரைப் பற்றி ' எழுதவில்லை என்பதோ, கால்டுவெல்/ஜி.யூ.போப் பற்றியோ, மனோன்மணீயம் சுந்தரனாரைப் பற்றியோ ஏன் எழுதவில்லை என்பதோ புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
ஆனால் சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என எழுதிய மாக்ஸ்முல்லரைப் பாரதி எழுதியதும் ஆச்சரியமில்லாத ஒன்றுதான்.
****
ஆ.ரா.வேங்கடாசலபதி தொகுத்த 'விஜயா ' கட்டுரைகள் நூலில் கண்ட செய்தி, பாரதியின் சாதிச்சங்க ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றது.
பாரதி மறைவதற்கு 4 மாதங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ஒரு பிராமண சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றிய ஒரு விரிவான பதிவு 'சுதேசமித்திரனிலிருந்து ' மறுபதிப்பிடப்பட்டுள்ளது. எம்.கே. ஆச்சாரியாரின் பேச்சும், கூட்டத் தீர்மானங்களும் மட்டுமே சுதேச மித்திரனில் விரிவாகப் பதியப் பெற்றிருக்கின்றன. 'ஆரம்பத்தில் வெகுசிலரே வந்திருப்பினும், பின்னிட்டு ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி கர்ஜிக்க ஆரம்பித்தவுடனே 200 பேருக்குமேல் கூடிவிட்டார்கள் ' என்றும், கடைசியில் 'ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி பொதுவாக பிராமணரல்லாதார் இயக்கத்தின் அஸ்திவாரக் கொள்கையையும், போலி வாதங்களையும் நிர்த்தூளியாக்கியபின் சபை கலைந்தது.
பரம வைதீகரும், தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவை எதிர்த்தவரும், குழந்தைத்திருமணத்தைத் தீவிரமாய் ஆதரித்து இயக்கம் கண்டவரும், வர்ணாசிரம தர்மத்தின் பாதுகாவலராகச் செயல்பட்டவருமாகிய எம்.கே. ஆச்சாரியாவுடன், பாரதியார் மேடையைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
****
பாரதியார், நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், 'வேதத்தைத் தவறாக உச்சரிப்பவனை விட, ஒழுங்காகச் சிரைப்பவன் மேல் என்று கூறு ' என்று சொல்லி உள்ளார். இதில் முடி திருத்தும் செயலைத் தாழ்வாக, ஆதிக்க சாதித்திமிரோடு ஏளனப்படுத்திப் பார்க்கும் போக்கு கவனிக்கத்தக்கது.
இதையெல்லாம் சொல்லும்போது அப்பாவியாய், அவர் தலித் ஒருவருக்குப் பூணூல் அணிவித்தாரே எனும் கேள்வி எவருக்குமே தோன்றும். இதில் கூட தன் ஆதிக்க சாதி அடையாளத்தை (பூணூல்) விட்டுக்கொடுக்க மறுக்கும் மனப்பான்மை தெரிவது கண்கூடு.
இதே லாஜிக்கில் தான் மரக்கறி உணவு உண்ணும் சாதி இந்துக்கள் தம் உணவுக் கலாச்சாரத்தை மாட்டுக்கறி/ பன்றிக்கறி உண்பவர்கள் மேல் திணிப்பதும், கிராம தேவதைகளைக் கெடா வெட்டி வணங்கும் பூசாரிகளுக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செயலும் நடக்கிறது.
****
பாரதியின் ஊரில் இருந்து 20 கிமீக்குள் வாழ்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளை எதிர்த்துப் போரிட்ட கட்ட பொம்மனைப் பற்றி அவர் ஒன்றும் எழுதவில்லை. இதற்கு ஆய்வாளர் ஆ.ரா.வேங்கடாசலபதி தரும் காரணம் பொருத்தமாய் உள்ளது. கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்ப ஜமீன்தாரின் சந்ததிக்கு பாரதி நண்பராய் இருந்ததும், கடைசிக் காலத்தில் அந்த ஜமீனுக்கு முதுகு சொரிந்து சீட்டுக்கவி எழுதுவதற்கும் இடைஞ்சலாய் இல்லாமல் இருக்க, கட்டபொம்மனைப் பற்றி எழுதுவதை அவர் தவிர்த்திருந்திருக்கலாம் என சலபதி சொல்கிறார். அவரும் 'சில வேடிக்கை மனிதர்களைப் போல்தான் ' வீழ்ந்திருக்கிறார்.
****
கரிசல் வட்டாரத்தில் பிறந்த கட்டபொம்மன்,ஊமைத்துரை,சுந்தரலிங்கம்,தானாபதிப்பிள்ளை,வ.உ.சி,பாரதி ஆகியோர்கள் ஒரு வசதிக்காக அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பை வைத்து ஒப்பிடலாம்.
கட்டபொம்மன்,ஊமைத்துரை,சுந்தரலிங்கம் போரில் கொல்லப்படும் வரை தீவிரமாய் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்தவர்கள். தானாபதிப்பிள்ளை, நாகலாபுரத்தில் கம்பெனியால் தூக்கில் கொல்லப்பட்டார். அவர் மாண்டபிறகும் கம்பெனிக்கு அவர் மேல் இருந்த வெறுப்பு குறையவில்லை என்பதற்கு, இறந்த பிள்ளையின் தலையை வெட்டி, பாஞ்சாலங்குறிச்சிக்குக் கம்பெனியார் அனுப்பி வைத்தது சான்றாகும். வெள்ளையனை விரட்ட, பஞ்சாலைத் தொழிலாளிகளைத்திரட்டி வேலை நிறுத்தமும், போட்டியாய் கப்பல் போக்குவரத்தும் நடத்திய சிதம்பரம் பிள்ளைக்குக் கடுங்காவல் தந்தது வெள்ளை அரசு. உள்ளங்கைத் தோல் உரிந்து ரத்தம் சொட்ட, சணல் கயிறு திரித்தவர் வ.உ.சி., கோவைச் சிறையில்.
வ.உ.சி.யின் மீதான நெல்லைச் சதி வழக்கில், அவருக்கு ஆதரவாய் சாட்சி சொல்வதாய் வாக்களித்திருந்த பாரதி, வாய்தா அன்றைக்கு எங்கு சென்றார் என்பது இன்னமும் புரிபடாத மவுனம். சென்னை எக்மோரில் ரயில் ஏறியவர், தஞ்சாவூர் வரை சென்றிருக்கிறார். அதன் பிறகு ஆள் காணவில்லை என்கிறது சி.ஐ.டி. ரிப்போர்ட்.
கவர்னருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதும்போது கூட தன் சுய சாதி அபிமானத்தை விட்டுக்கொடுக்காமல், பாரதி 'என்னைப் போன்ற (பிராமண) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது ', என எழுதி உள்ளார்.
நீதிக்கட்சிக் காரர்களை, 'வெள்ளையனை ஆதரிக்கும் தேசத்துரோகிகள் ' என்று சொன்ன பாரதி, 1920ல் தனது படைப்புகளைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கினார். அதனை ஆதரிக்கக் கோரி நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'என் மீது அரசாங்கம் விதித்திருந்த தடைகள் யாவும் நீக்கப்பட்டு விட்டன. ஆதலால், அரசாங்க அதிகாரிகளையும் கூட எனக்குக் கடன் கொடுக்குமாறு தாங்கள் கேட்கலாம் ' எனக் குறிப்பிட்டுத் தம் ஏகாதிபத்திய சமரச நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளார்.
நண்பர்கள் உதவவில்லை.
****
பாரதிகிட்டே ஒன்னுமே நல்ல விசயம் கிடையாதா என்று சிலர் கேட்கலாம்.
1) பெண்களை, வயசுக்கு வந்த பிறகே கல்யாணம் செய்து கொடுக்கணும் என்று தன் குலத்தவருக்கு போதித்தார். அவர் இதைச் சொல்லும் சூழலில்கூட உழைக்கும் மக்களிடையே வயசுக்கு வராத பெண்ணைக் கல்யாணம் செய்தல் வழக்கத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.
2) கார்ட்டூன் படங்களை தமிழ்ப் பத்திரிக்கையில் அறிமுகம் செய்தார். அதுவும் கூட அவரது பிற்போக்கு இந்து தேசியத்திற்குதான் உதவியது.
3) கவிதையை எளிய தமிழில் எழுதினார். அது எதற்குப் பயன்பட்டது ? புதிய மொந்தை, பழைய புளித்த கள்ளைத்தானே ஊற்றப் பயன்பட்டது!
4) இஸ்லாமியர் ஒருவரின் கடையிலே டா குடித்தார்.
****
vellaram@yahoo.com
திண்ணையில் கற்பக விநாயகம்

பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்

1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, அதே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்சிக்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இரண்டே ஆண்டுகளில் தமிழினத் தலைவரோடு கூட்டு சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியும் பழியை, தமிழ்சமுதாயத்தின் மீதே போடலாம்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மாவீரன் கட்டபொம்மனைப் பாராட்டி எழுதாத பாரதியின் நெஞ்சுரம், நாட்டைக் கூட்டிக் கொடுத்து ஜமீனாகி அன்னியனுக்கு சேவை செய்த எட்டப்ப பூபதிக்குத் தூக்குக் கவி எழுதியதையும், தமிழ் சமூகம் மீதே பழிபோட்டால் தீர்ந்தது கணக்கு.
தமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாமல் மறைந்து போன பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் போன்ற நாடகமேதைகள் போலீசின் தடையை மீறியும் "டயர் மடையன்" போன்ற பாடல்களால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பாடினார்களே, அவர்களும் இந்தத் தமிழ்சமுதாயத்தில்தான் உதித்தார்கள். நாட்டார் பாடல்களிலும், கொலைச்சிந்துக்களிலும் இடம் பிடித்த ஜெனரல் டயரின் கொடுஞ்செயலை குஜிலிப் புத்தகம் எழுதும் லோக்கல் எழுத்தாளர்கள் கூட எழுதத் துணிந்தபோது, நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி அன்னிபெசண்ட் வழியிலே சென்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்க மட்டும் பாரதிக்கு துணிச்சல் வந்ததே அங்கிருக்கிறது சாதிப்பற்று.
அதே தமிழ்ச் சமுதாயத்தைத் தன்னகத்தே கொண்ட பாரத சமுதாயம்தான், கொடியவன் டயரைப் பழிதீர்க்க, வீரன் உத்தம்சிங்கை உற்பத்தி செய்தது.
"மாட்சிமை தாங்கிய" கவர்னர்பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் ஒன்றில் கூட "தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு" சிறை வாழ்வு ஒத்து வராது எனச் சுய சாதிப் பெருமை பேசிய பாரதி வாழ்ந்த அதே மண்ணில்தான் புரட்சிக்காரன் பகத்சிங்கும் பிறந்தான். அவனின் தந்தை, தன் மகனை மன்னிக்கும்படி கடிதம் எழுத நேர்ந்தபோது, அந்தத் தந்தையைக் கடிந்து வேதனையுடன் கடும்சொற்களால் அவ்வீரன் அர்ச்சித்துக் கடிதம் எழுதியதும் இந்த மண்ணில்தான்.
பாரதியார், ஏதோ ஒரு முறை தவறுதலாக மன்னிப்புக் கேட்டு விட்டாரென்றில்லை. பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் போட்டு மண்டியிட்டவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.
கடலூர் சிறையில் இருந்தபடி எழுதிய 1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னர் 1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறார்.
மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்ட அதே 1914ஆம் ஆண்டு பாரதியார் ஒரு பாட்டும் எழுதி இருக்கிறார்.
அப்பாட்டு "அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே....இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் ....உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்பதாகும்.
இந்த வீரம் கொப்பளிக்கும் பாட்டைக் கேட்டு தேசப்பற்றுள்ள மக்கள் புல்லரித்துக் கொண்டு இருக்கும்போதே நம்ம 'சத்திய ஆவேசம்' கொண்ட கவிஞரோ, நம்ம எதிரிக்கு பேனாவால் முதுகு சொரிந்து கொண்டிருந்தாரே.
8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், தம்மை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், 'நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை' என்று எழுதினார்.
1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இறைஞ்சியுள்ளார்.
பின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் இன்னும் கீழே போய், 'ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்' என்றிடும் அளவிற்குப் போய்விட்டார், சூரப்புலி.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்லலாம். பிரிட்டிஷாருக்கு எழுதிக்கொடுத்த வாக்குறுதியை அச்சு பிசகாமல் காப்பாற்றியுள்ளார். தனது அரசியல் குருவான திலகர் இறந்ததற்குக் கூட இரங்கல் எழுதாமல்தான் இருந்துள்ளார். ஆனால் அதே ஆண்டில் இறந்த ஓவியர் ரவிவர்மாவுக்கும், இசைக்கலைஞர் சுப்புராம தீட்சிதருக்கும் தலா ஒரு இரங்கல் வீதம் எழுதியுள்ளார்.
2) நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலே "தவறாக வேதம் ஓதுபவனைவிட, ஒழுங்காய்ச் சிரைப்பவனே மேல் என்று கூறடா தம்பி" என்று எழுதியதில்தான் 'இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தில்லி பார்ப்பன மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் தெருப் பெருக்கித் தம் எதிர்ப்பை வெளியிட்ட சாதித்திமிருக்கான' விதை இருக்கிறது.
3) தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன? மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது?
4) நாலு வருணங்கள் சிதைவதை மிகவும் மனம் நொந்து 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' எனப் பாடியது சாதி ஆதரவுக் குரல் ஆகாதா?
5) "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் பாரதி சொல்லிக் கொண்டிருந்த காலத்துக்குச் சற்றே முன்புதான், அவர் ஊரான எட்டையபுரத்திற்கு கூப்பிடு தொலைவில், நாடார்கள் மேல்நிலையாக்கம் நோக்கிப் போவதைப் பொறுக்காமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாத்தாவான வெள்ளைச் சாமித் தேவர் தலைமையில் சிவகாசியை எரித்து, நூற்றுக்கணக்கில் மனிதர்களை வெட்டித் தள்ளியது ஒரு சாதி வெறிக் கும்பல். சாதியை ஒழிக்காமல் இந்த வெறிச்செயல்களை எல்லாம் நிறுத்த முடியாதென்பது தெள்ளத் தெளிவாய்த் தெரியும்போதே, சாதிக்களைக்கு நீரூற்றி வளர்க்கும் விதமாய் பாரதி எழுதியதை எப்படிச் சகித்துக் கொள்வது?
6) பார்ப்பனரல்லாதார் இயக்கம் சென்னையில் கூட்டம் நடத்தியபோது "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" எனக் கோபமாகக் கேட்டதில் ஓருண்மை அவர் மூலமாகவே அம்பலமாகின்றது. 'ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள்' என்று பாரதி முசுலீமையோ, கிறித்துவரையோ, அல்லது நாத்திகர்களையோ சொல்லவில்லை.கடவுள் பக்தி கொண்டிருந்த டி.எம்.நாயரையும், தியாகராயச் செட்டியாரையும், நடேச முதலியாரையும்தான்.இவர்கள் பார்ப்பனரல்லாதாருக்காக உழைத்தால் அது ஹிந்து விரோதம் என்றால், ஹிந்து மதம் என்பதே பார்ப்பனர்கள் மட்டும்தான் என்று பாரதி கருதி இருப்பது தெரிய வருகிறது. தாம் தனிப்பட்ட வகுப்பினர்தான் என்பதை "வேதியராயினும், வேற்றுக் குலத்தவராயினும்" எனப் பிரித்துத்தான் அவரால் எழுத முடிந்திருக்கின்றது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் ஒவ்வொரு பிராமண சபையிலும் போய் தாக்கிப் பேசி விட்டு வந்ததெல்லாம் சாதி ஒழிப்புப் போர்த் தந்திரமா?
இல்லை. அதுதான் பச்சைப் பார்ப்பனீயம்.
1906ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் இருந்து சட்டசபைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டிய தேர்தலில், தேசிகாச்சாரி எனும் பார்ப்பனர் ஒருவரின் விடாப் பிடிவாதத்திற்காக, டாக்டர் டி.எம்.நாயர் விட்டுக் கொடுத்த செயலை "பெருந்தன்மை" எனப் புகழ்ந்த பாரதி 1916லே அதே நாயரை "டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகள்" என்று சாடியுள்ளார். இவ்வேறுபாட்டின் காரணம், 1906இல் பார்ப்பனருக்காக விட்டுக்கொடுத்த காங்கிரசுக் கார நாயர் 1916, இவர்களின் ஆதிக்கம் பொறுக்க இயலாது பிராமணரல்லாதார் இயக்கம் கண்டதே.
தன் சாதி நலன் ஒன்றே குறியாய் இருந்ததால் கோபம் கொண்டு நாயரைத் தேசத் துரோகி என்று திட்டிய பாரதி, தேச விடுதலைக்காக வெடிமருந்து சேகரித்துக் கொண்டிருந்தாராக்கும் என நாம் நினைத்தால் நம்மைக் கேணையராக்கிட 1916லேயே "மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை" என்று எழுதி வைத்து இருக்கிறார். இந்தப்படிக்கு எழுதும் பாரதி எந்த விதத்தில் நாயரைத் தேசத்துரோகி என்கிறார்? பாரதிக்கு 'அக்கிரகாரம் மட்டுமே தேசம்' என்ற இக்கினியூண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ரொம்பப் பிடிக்குமாக்கும்.
வெள்ளையர் ஆதிக்கத்தைக் கண்டு கோபம் கொள்ளாது, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கண்டதும் "ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து வழக்கப்படுத்தாத வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாய் இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மட்டுமே சார்ந்ததாகாது" எனத் தன் சுய சாதிக்கு ஒரு பாதுகாப்பு வளையம் தந்திட்டவர்தானே பாரதி? 'நாங்க மட்டும் குற்றவாளிக இல்ல. எல்லோரும்தான். அதிலே பிராமணாள் பத்தோட பதினொன்னுதானே' எனச் சப்பைக்கட்டுக் கட்ட ஒருவனுக்கு எது மனத்துணிவைத் தருகிறது?
7) "சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்" என்கிறார் ம.ம. இது, பாரதிக்கும் பொருந்தும் தானே!. சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார்? சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்தான் எத்தனை தூரம்!
எவ்வளவுதான் தனது சுயசாதிக்காக உழைத்தாலும் சூதறிஞர் ராஜாஜி, தன் மகளை, பனியா காந்தியின் மகனுக்கு மணம் முடித்திருக்கிறார். ராஜாஜியின் இச்செயலைவிடப் பாரதியின் செயல் தாழ்வானதுதான்.
8) சாதி வெறி பாரதியிடம் மட்டும் இல்லை. ம.ம.விடமும் இருக்கிறது என்பதை, கடையம் நாராயணப்பிள்ளையைப் பற்றி அவர் எழுதிய "ஈனப் பிறவி", "கொழுப்பு" எனும் வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன.
"பாரதிதாசன், பாரதியை 'அய்யர்' என்று மரியாதையுடன் (!) அழைத்தார்" என ஒரு நபர் குறிப்பிடுகிறார் என்பதில் இருந்தே, 'அய்யர்' என்ற பதத்திற்கு ம.ம. தரும் மரியாதையும், உயர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.
9) சூத்திரர்கள், பிராமணப்பெண்ணைப் புணர்வதைத் தடைசெய்யும் மனு, சூத்திரப் பெண்களைப் பெண்டாள, பிராமணருக்கு அனுமதி தந்திருப்பதன் மறுவார்ப்புத்தான் இவை. பாரதி கடையத்தில் நடந்து கொண்டதை ஒருவர் நியாயப்படுத்தினால், அவர் நிச்சயமாய் சாதி உணர்வைக் கடந்தவரில்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.
10) 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' எனத் தலித் மக்களை 'ஈனர்'களாய்ப் பார்த்தவர்தானே பாரதி?
வேறொரு இடத்திலே 'வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்' எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது?
11) பாரதியின் சாதிவெறியை அம்பலப்படுத்திடும் போதெல்லாம், பாரதி ரசிகர் மன்றத்தினர் வழக்கமாய் "அவர் தனது சுய சாதியையே பலமாக எதிர்த்தவர்" என்று கோரஸ் பாடுவது வழக்கம்.
இதற்கு மதிமாறன் "பாரதியின் பார்ப்பன எதிர்ப்பு, தீவிரமான அல்லது உண்மையான ஒன்றாக இருந்தால், பார்ப்பன உணர்வில் ஊறிய நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பணக்காரர்கள் பாரதிக்கு வேலை வாய்ப்பு தந்ததும், இக்கட்டான நேரங்களில், குறிப்பாகப் பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகப் போனதற்கு உதவி செய்ததும், கைதான பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்ததும், மீண்டும் வேலை வாய்ப்புத் தந்தது எதனால்? பாரதியைச் சிறை மீட்ட குழு: மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் மற்றும் அன்னிபெசண்ட்" எனக் கேட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மவுனம் காக்கிறார்கள்.
12) சாதி வெறி மட்டும் அல்ல, இந்து மதவெறியும் அந்தக் கவிஞனைப் பாடாய்ப் படுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் "இந்தியா என்பது இந்துக்கள் நாடு. அதாவது வேத பூமி அல்லது வேதபுரம். இங்கு எந்த மதத்தினர் வாழ்ந்தாலும் இந்த உணர்வோடுதான் வாழ வேண்டும். இல்லை வேத புத்திரர்களின் உணர்வைப் புரிந்து கொண்டாவது வாழ வேண்டும்" என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சன் சொல்ல வேண்டியதை ஏன் பாரதி சொல்ல வேண்டும்?
முஸ்லிம்களை "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" என்று அவர் விசம் கக்கி வைத்திருப்பதால்தான் சோ ராமசாமியில் இருந்து மலர்மன்னன் வரை அனைத்து இந்துத்துவக் குழுக்களும் அவருக்குப் பல்லக்கு தூக்குகின்றன.
சிவாஜி கூறியதாகப் பாரதி அளந்து விடும்போது கூட குரானை இழிவுபடுத்திட "வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே" என்று பாடி வைத்து, குரானை 'பேதை' நூல் என்று சொல்லியவர்தான்.
13) திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோம்!" என்று ராமகோபாலன்ஜி ரேஞ்சுக்கு வருத்தப்படுகிறாரே பாரதி அங்கிருக்கிறது மதத் துவேஷம். வேறொரு கட்டுரையில் "மிஷனரி பள்ளிக்கு மக்களை அனுப்பும் தந்தைமாரைப் புத்திரத்துரோகிகள்" என்று அன்பாய்க் கடிந்து கொள்கிறார்.
முன்னூறு பேர், இந்து சமயத்தில் இருந்து கிறிஸ்தவம் போனபோது "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.." என்று மதத் துவேஷியாகிறார், பாரதியார்.
துவேஷத்துக்கு ஓர் எல்லையில்லையா? மன்னிக்கணும், இந்தக் கேள்வி பாரதியைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.
பாரதியார் சொன்ன/எழுதிய/பாடிய அத்தனையும் எவ்வகையான நபர்களை உருவாக்கியது என்பதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி ஒன்றைச் சொல்லலாம்.
கேள்வி:- "இந்து மதக் கொள்கையில் ஈடுபாடு கொள்ள, உங்களை ஈர்த்தது எது?"
பதில்:- "பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது, பாரதியார் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். அவரோட தேசியப்பாடல்களை மனப்பாடமாகப் பாடுவேன். அப்போ இந்து மதக் கூட்டம் ஒன்று கேட்டேன். ஏற்கெனவே பாரதி பாடல்களைப் படித்திருந்ததால், இந்து மதக் கூட்டம் என்னைச் சுலபமாகக் கவர்ந்தது"
மேற்கண்ட பதிலைச் சொன்னவர், இந்து முன்னணியின் ராம கோபாலன்.
14) மலர்மன்னனின் பார்வையில் 'பெரியார் ஒருவர் உண்டென்றால் அது பாரதியார்தானாம்'. பெரியார் எனும் பட்டத்தை ஈவேராவிற்கு வழங்கியவர்களே மகளிர்தான். அதனால் மகளிர் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்துடன் மலர்மன்னனின் பெரியாரையும், தமிழர்களின் பெரியாரையும் ஒப்பிடலாம். கள்ளுக்கடை மறியலை நிறுத்திவைக்கலாமே எனக் காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்னது "அது என் கையில் இல்லை. ஈரோட்டிலே இவ்விசயத்தில் தீவிரமாய் இருக்கும் கண்ணம்மா மற்றும் நாகம்மை ஆகிய இரு பெண்களின் கைகளில்தான் அது உள்ளது" என்றார். கண்ணம்மா, பெரியாரின் தங்கை. நாகம்மை, பெரியாரின் மனைவி. பெரியார், பெண் விடுதலையை வெறும் பேச்சோடு நிறுத்திடாமல், தம் குடும்பத்துப் பெண்டிரையும் ஆண்களோடு சமமாய் பொதுவாழ்வில் ஈடுபாடு காட்டிடத் துணையாய் நின்றார்.
ஆனால் பாரதியோ, கடையம் ஊரில் இருந்த கடைசிக் காலத்தில், அவ்வூருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையிலுள்ள சாமியாரைப் பார்ப்பதற்கு அவரின் 14 வயது மகள், தங்கம்மா வர மறுத்ததற்காக பொது இடமென்றும் பாராமல் செவிட்டில் அறைந்து தன் ஆண் தன்மையை வெளிப்படுத்தியவர்தான் பாரதிப் பெரியார்.
இதே பெரியார்(?)தான் பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர்களைத் திட்ட 'பெட்டைப் புலம்பல்' என்றும், சிவாஜி தன் சைனியத்துக்கு ஆற்றிய வீரவுரைப் பாட்டில் "ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் வீணில் இங்கிருந்து" என்றும், "பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்" என்றும், 1910 பிப்ரவரியில் கர்மயோகியில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் புகழ்ந்தும் எழுதியவர்.
பெண் விடுதலை, வேதங்களில் புராணங்களில் பெண்களின் நிலை என்றெல்லாம் விரல்நுனியில் தகவல்களை வைத்துப் பாட்டினில் பாடிய பாரதிக்கு, 1912இலே மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதிப் போற்றிடத் தோன்றவில்லை? எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா?
'சிறந்த பெண்மணி' எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
"(தலித்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்" என்று வக்கிரமாய் எழுதிய அன்னிபெசண்ட் தான் அவர்.
15) 'வாழ்க நீ எம்மான்' எனக் காந்திக்கும் ஒரு பாட்டு. பாட்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அவர் அறிவித்த 'ஒத்துழையாமை' தன் சாதியினர் அனுபவித்து வந்த எலும்புத்துண்டு பதவிகளுக்கு உலை வைக்கும் வேளையில் 'அத்தகைய ஒத்துழையாமையெல்லாம்' வேலைக்கு ஆகாது என எழுதிக் காந்திக்குத் துரோகம் செய்யும் பாரதியார் பெரியாரா? அல்லது ஒத்துழையாமையின்படி கோர்ட், கச்சேரிகளைப் புறக்கணித்ததால் 1919லேயே தனக்கு வர வேண்டிய ரூபாய் அய்ம்பதாயிரத்தை இழந்து நின்ற ஈவேரா, பெரியாரா?
16) சாதியை மறைத்து வைக்கிறேன் என்று தலித்துக்குப் பூணூல் போடும் அபத்தமான சிறுபிள்ளை விளையாட்டை நிகழ்த்திய பாரதி, பெரியாரா?
சாதியைக் கட்டிக் காக்கும் மனுதர்மத்தைக் கொளுத்திய ஈரோட்டார், பெரியாரா?
17) சாதியை விட்டுப் பெண் தர மறுத்துப் பிரச்சினை பண்ணி, சென்னைக்கு ஓடி வந்து ஒளிந்த பாரதி, பெரியாரா?
சாதியினைக் காப்பாற்றி வரும் சக்தியே அகமண முறையில்தான் அடங்கி இருக்கிறது என்பதால், சாதி ஒழிப்புத் திருமணத்தை ஆயிரக்கணக்கில் நடத்தி வைத்ததன் மூலம், இன்றும் பல்லாயிரம் சாதி மறுப்பாளர்களை உருவாக்கி வைத்த ஈவேரா, பெரியாரா?
தமிழனுக்கு தன்மானத்தைப் போதித்த தந்தை பெரியார்தான், தமிழர்களான எமக்குப் பெரியார் ஆவார். எங்கள் தலைமுறைக்குக் கல்வியை வழங்கிட இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த வெண்தாடிக் காரர்தான் எங்களுக்குப் பெரியார்.
வேண்டுமானால், மலர்மன்னன் போன்ற மூன்று சதவீத இந்துத்துவ ஆட்கள், பாரதியைப் பெரியார் என்று கட்டிக் கொண்டு அழகு பார்க்கட்டும். யாரும் வருந்தப் போவதில்லை.
பாரதியார் சிறந்த பாவலர். இனிமையான பாடல்களைச் செய்தவர் என்பதில் அய்யமில்லை. அவர் குறிப்பிட்டுக் கடிந்த 'இரும்பினால் செய்யப்பட்ட காதுகளின்' சொந்தக் காரர்களான தியாகராயர் பஜனைக் கோஷ்டியில், பாரதி விரும்பியபடியே தமிழ்ப் பாடல்களைப் பாடிட, திருவையாறு தியாகராயர் ஆராதனையிலோ, பாரதிக்கு கடலூர் சிறையில் இருந்து எந்த முறையில் தெண்டனிட்டு கருணை மனு எழுத வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த ஆங்கிலேயப் பேரரசின் மாசு மருவற்ற விசுவாசி சர் சி.பி.ராமசாமி அய்யர் நிறுவிய மியூசிக் அக்கடமியிலோ மலர்மன்னன் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பாரதியின் இந்த ஆசையைக் கூட இவர்கள் கோரியதில்லை. அதனைச் செய்யக் கூட திருவையாற்றுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்தான் வந்து போலீசிடம் மண்டை உடைபட வேண்டியிருக்கிறது.
'நீங்கள் சொல்லியது உண்மையென்றால் ஏன் பாரதி தேசியக்கவியாகவும், விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறார்?' என்ற உங்களின் கேள்விக்குப் பதிலை அம்பேத்கர் தந்திருக்கிறார்.
"திறமையுள்ள ஒரு தீண்டத்தகாதவரின் கண்ணியத்தையும் உயர்வையும் குறைத்துக் காட்டுவதற்கென ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஓர் இந்து தலைவன், மிகப்பெரும் இந்தியத் தலைவராகப் போற்றப்படுவார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும், யாரும் அவரை பார்ப்பனர்களின் தலைவன் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், ஒரு தலைவன் தீண்டத்தகாதவராக இருந்தால், அவரின் சாதி பற்றி குறிப்பிட்டு-அவர் தீண்டத்தகாத மக்களின் தலைவராக விவரிக்கப்படுவார்.
ஓர் இந்து டாக்டர், மிகப்பெரும் இந்திய டாக்டராக சித்தரிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருப்பினும், எவரும் அவரை ஓர் அய்யங்கார் என்று கூற மாட்டார்கள். ஆனால் அதே டாக்டர் ஒரு தீண்டத்தகாதவராக இருப்பார் எனில், அவர் ஒரு தீண்டத்தகாதவர் என்று அடையாளம் காட்டப்படுவார். ஓர் இந்து பாடகர், பெரிய இந்துப் பாடகராகப் போற்றப்படுவார். ஆனால், அதே பாடகர் ஒரு தீண்டத்தகாதவராக இருக்கும் பட்சத்தில், அவர் ஒரு தீண்டத்தகாத பாடகராக விளம்பரப்படுத்தப்படுவார்."
18) பின்னிணைப்பு:
****************
கடலூரில் இருந்து பாரதி எழுதிய புரட்சிகர கடிதம்:-
om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.
To,
His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.

I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************
சான்றாதார நூல்கள்:
1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்
************************************
vellaram@yahoo.com

திண்ணையில் கற்பக விநாயகம்