இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Tuesday 5 June, 2007

கழிப்பறையில் பாரதியார் படம்

ர்நாடகத்தில் 'தேசிய கவி'க்கு அவமரியாதை

திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர். சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன. அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். திம்பூர் அருகே உள்ள கிப்னஹள்ளி கிராஸ் என்ற இடத்தில் மயூரா என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையின் முகப்பில் மகாகவி பாரதியாரின் கம்பீரப் படத்தைப் போட்டு அவரைக் கேவலப்படுத்தியுள்ளனர். மகாகவியை அறிந்தவர்கள் இதைப் பார்த்து மனம் கொதித்துப் போயுள்ளனர். இதுகுறித்து ஹோட்டலின் கழிப்பறையை காண்டிராக்டுக்கு எடுத்திருப்பவர்களிடம் கேட்டால், இவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆண்கள் கழிப்பறை என்பதை குறிப்பிடும் வகையில் இந்தப் படத்தை இங்கே வைத்துள்ளோம் என்கின்றனர் படு கூலாக. பாரதியாருக்கு நேர்ந்துள்ள இந்த அவமரியாதையை அந்த ஹோட்டலுக்கு வந்த அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தட்டிக் கேட்காதது ஏன், தடுத்து நிறுத்தாது ஏன் என்று புரியவில்லை. தமிழர்களுக்கு மட்டும் இது அவமானமல்ல, ஒரு மாபெரும் கவியை கேவப்படுத்தியதன் மூலம் இந்தத் தேசத்தையும் அவமானப்படுத்தியுள்ளனர் அந்த ஹோட்டல்காரர்கள். உரியவர்கள் கவனித்து மகாகவிக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லைவர்கள், தமிழறிஞர்கள் கண்டனம் ஜூன் 05, 2007 சென்னை: மகாகவி பாரதியாரின் படத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹோட்டல் கழிப்பறையில் வைத்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் திம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையின் முகப்பில் பாரதியாரின் படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் உலகெங்கும் உள்ள தமிழர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைந்து விட்டால் என்றுதான் ஆத்திரமும், கவலையும் வருகிறது. முன்பு திருவள்ளுவர் சிலையை கோணி போட்டு மூடி வைத்து அவமானப்படுத்தினர். இன்று பாரதியை அவமானப்படுத்தியுள்ளனர். இதுபோல கன்னடக் கவி குவெம்புவுக்கு அவமானம் நடந்தால் கர்நாடகத்தார் பொறுத்திருப்பார்களா. பாரதியை சிறுமைப்படுத்தும் இந்த அநாகரீகச் செயல், திட்டமிட்டு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன் விடுத்துள்ள அறிக்கையில், ஆண்கள் கழிப்பறையை அடையாளம் காட்ட பாரதி படம்தான் கிடைத்ததா. தேச பக்தர்களாகவும், பாரதமாதாவின் வீரப் புதல்வர்களாகவும் கன்னடர்களையும் சேர்த்தே பாடியவர் மகாகவி பாரதி. கர்நாடக சட்டமன்றத்தில் பாரதியின் படத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் கழிப்பறையில் படத்தை வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். உடனடியாக அந்தப் படத்தை அங்கிருந்து எடுப்பதோடு, இந்த செயலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், இது சமூகப் பிழையோடு சரித்திரப் பிழையுமாகும். வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும், அறியாதார் தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலை கொள்ளச் செய்கிறது. இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா அந்த மீசை சூரியனை தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா இது உடனே அழிக்கப்பட வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால், கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறலாக எடுத்துக் கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி என்று கூறியுள்ளார் வைரமுத்து.