இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday 15 June, 2007

பாரதி தற்கொலை செய்து கொண்டாரா?

இந்த நூற்றாண்டின் தமிழின் ஒரே மகா கவியான பாரதி 39 வயது முடிவடைவதற்குள் மரணம் அடைந்துவிட்டார்! இவ்வளவு இளம் வயதில் இவருக்கு ஏன் மரணம் நிகழந்தது..? பாரதி, மதம் பிடித்த யானையால் தாக்குண்டு அடிபட்டு இறந்தார் என்று பலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். யானை, துதிக்கையால் விசிறி எறிந்து, பின்னர் அவர் நலிவுற்று மாண்டார் என்றும் குறிப்பிடுகின்றனர். பாரதி மரணத்தோடு யானையைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது ஆர்வம் தரும் கர்பனையேயன்றி, இதில் துளியும் உண்மை இல்லை!யானை அவரை தாக்கியது ஜூன் 1919. அவர் மரணமடைந்தது 11-செப்டம்பர் 1921.யானையால் தாக்குண்ட நிகழ்ச்சிக்கு பின் பாரதி ஏறக்குறைய ஏழுமாதங்கள் தம் துணையாசிரியர் பதவியை 'சுதேசமித்திரன்' அலுவலகத்தில் சிறப்பாக ஆற்றியிருக்கிறார். பல சொற்பொழிவுகள் நிகழ்த்தி இருக்கிறார்.அவர் மரணம் ஏறத்தாழ ஒரு மெதுவான தற்கொலையாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. அவரின் கடைசி கால வாழ்வை உன்னிப்பாக கவனித்ததில் இந்த எண்ணம் அழையா விருந்தாளியாக வருகிறது.கடைசி மூன்று ஆண்டுகள் அவர் கடும் மன உளைச்சலுக்கும், ஏமாற்ரங்களுக்கும் உள்ளாகி இருக்கிறார்.1918 நவம்பர் 20ம் தேதி பாரதி பிரஞ்சு புதுவையை விட்டு, பிரிட்டீஷ் இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்து, கடலூருக்கு வரும் தருவாயில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் 'குற்றவாளி'யாக அடைக்கப்படுகிறார். அப்போது, சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார், அன்னிபெசண்ட் அம்மையார், மணி அய்யர், சர்.சி.பி. ராமசாமி அய்யர் ஆகியோர் மிக முயன்றே அவரை சிறை மீட்க முடிந்தது.

இச்சூழலின் சிறையிலிருந்த பாரதி சென்னை மாகாண முதல்வருக்கு ஓரு கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏற்பட்டது. அதுவரை ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் தம் பேச்சாலும், எழுத்தாலும் கடுமையாக எதிர்த்த பாரதி, அக்கடிதத்தில், "...மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கூறுகிரேன். நான் எல்லா அரசியல் ஈடுபாடுகளையும் துறந்து விட்டேன். நான் எப்போதும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன். ஆகையால், மேன்மைமிகு தாங்கள், என்னை உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டுகிறேன்." என்று தம் மனசாட்சிக்கு எதிராக எழுதிக்கொடுக்க வேண்டியதாயிற்று.தம்மைக் காப்பாற்ற முன்வந்தோரின் வேண்டுகோளின்படி இப்படி எழுதித்தர வேண்டிய தர்மசங்கட நிலை, பாரதியின் உள்ளத்தில் உளைச்சலை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.விடுதலையான பாரதி, தம் படைப்புக்களை நூலாக வெளியிடும் பணியே இனி செய்ய வேண்டிய முக்கிய எதிர்க்காலத்திட்டம் என்று தீர்மானித்தார். இவ்வெளியீட்டு முயற்சிக்கு முதலில் உதவி கேட்க, தம் இளமைக்கால நண்பரான எட்டையபுரம் மன்னரைச் சந்திக்க 1919மே மாதம் தன் பிறந்த ஊரான எட்டையபுரம் சென்றார். தம் நோக்கை விளக்கும் பொருட்டு, சீட்டுக்கவிகளும் பணிந்தெழுதினார். ஆனால் அவரைப் பார்க்கவோ, உதவவோ மன்னர் முன் வராது புறக்கணித்தார்.அடுத்து பாரதி, தன் மீது அன்பு காட்டிய நாட்டுக்கோட்டை செட்டிமார் சிலரின் ஆதரவை நாடினார். 15.11.1919ல் வை.க.சண்முகம் செட்டியாருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார்.ஆனால் விருந்தோம்பல் செய்து அவர் சொற்பொழிவுகளையும், பாடல்களையும் புகழ்ந்துரைத்த அவரும், மற்றும் பலரும், ஏனோ வெளியீட்டு முயற்சிக்குப் பொருள் உதவி செய்ய முன்வரவில்லை.தொடர்ந்து விரட்டிய வறுமையும், பொய்யாகப்போன எதிர்பார்ப்புகளும் கொடுத்த மனச்சோர்விலிருந்து தப்ப, அவர் பயன்படுத்திய கஞ்சாவும், அபினும் பாரதியின் உடலை நாளுக்கு நாள் பாதித்தன. அவர் எலும்பிச்சையளவு அபினை உருட்டிச் சாப்பிடுவதைக் கண்ட வ.உ.சியே ஒருமுறை வருந்தியிருக்கிறார்.1921,செப்டம்பர் தொடக்கத்தில் போதைப்பொருட்களின் விளைவால் வயிற்றுக் கடுப்பு நோய் அவரை வாட்டி வதைத்தது. நோய் எதிர்ப்பு சக்தி, நலிவுற்ற அவர் உடலில் குறைந்தது.உரிய நேரத்தில் சாப்பிட மறுத்தார். மருந்தை உட்கொள்ள மறுதலித்தார். குடும்பத்தார், நண்பர்கள் வற்புறுத்தியும் செவிமடுக்காமல் பிடிவாதமாக இருந்தார்.தொடர்ந்து ஏமாற்றங்களையும் இயலாமையையும் தாங்கி இந்தப் பூதவுடலில் வாழ்வதைவிட, மரணமில்லாப் புகழ் உடம்பை பெறுவதென அவர் முடிவு செய்திருக்கக் கூடும். தாம் மறைந்தாலன்றி தம் வெளியீடுகள் வெளிச்சத்திற்கு வராது என்ற உண்மையை உணர்ந்திருக்கக் கூடும். தம் நோயுற்ற உடலை அதன் போக்கில் சாக விட்டார்.செப்டம்பர் 11ம் தேதி வ.வே.சு அய்யர் கைது செய்யப்பட்டார். பாரதியின் பிடிவாத போக்கை கேள்வியுற்று, காவல்துறையின் அனுமதியுடன், கைதான சூழலிலும் பாரதியைச் சந்தித்து, உணவு உண்ணுமாறும், ஒழுங்காக மருந்து உட்கொள்ளுமாறும் அறிவுரைகளை கூறிச் சென்றார். ஆனால் பயனில்லை.பாரதி மகள் சகுந்தலா அன்றிறவு கொடுத்த கஞ்சியைக்கூட குடிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டார்.பாரதியின் நெருங்கிய நண்பரான நெல்லையப்பர், திருவல்லைக்கேணி மாடவீதியில் இருந்த ஜானகிராம் என்ற ஹோமியோபதி டாக்டரை அழைத்து வந்து காட்டினார். பாரதியை பரிசோதித்த டாக்டர் மருந்துகொடுக்க விரும்பினார். "எனக்கு எந்த மருந்தும் வேண்டாம்" என்று கண்டிப்புடன் கூறி, டாக்டரை திருப்பி அனுப்பினார் பாரதி.11-ம் தேதி பின்னிரவின் இரண்டு மணியளவில்(12-ம் தேதி அதிகாலை) பாரதியின் உடலைவிட்டு உயிர் பிரிந்தது. அவர் அமரரானார்.

பாரதி தற்கொலை செய்து கொண்டாரா?

டாக்டர். இ.ஜே.சுந்தர்.

நன்றி:- மலேசியன் இதயம்;
இதயம் பேசுகிறது 19.2.99.