இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday 4 May, 2007

கட்டபொம்மனைப் பாடாத பாரதி

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமர்சிக்கும் போதெல்லாம், ‘பாரதியை அவனது வரலாற்றுப் பின்புலத்தில் ¨¨படித்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்று கூறி விமர்சிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.
சரி வரலற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசிலிப்போம். பாரதி சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறான், கோகலே தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதிராய் போன்ற வட இந்திய தலைவர்களப் பற்றி பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம்,ரசிய்யா வைப்பற்றி எல்லாம் பாடியிருக்கிறார். காக்கை,குயில்,கிளி மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்..
ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனை பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை.சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்று இலக்கிய அறிவோ,உலக ஞானமோ இல்லாத அப்பகுதி மக்கள் கட்ட பொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் பாடதது ஏன்?
ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.
“எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து எட்டப்பனின் வாரிசான மண்ணுக்குத் தோழனாக இருந்து அவனை அண்டிப்பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும்? என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக் கூடும்.
“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி, அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்” அடேயப்பா ஈட்டி போல் பாயும் சொற்கள் பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய நேர்மைத் திறத்தைப் பற்றி பாரதி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுக்ளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருகிறார்களா?
வே.மணிக்கம் எழுதிய ‘தானபதிப்பிள்ளை வரலாறு” என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.
“கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைபற்றியோ பாஞ்சாலக்குறிச்சிப் பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு மிகுந்த நலிவுற்று பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1909 ல் ஓலைத்தூக்கும் சீட்டுக்கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில் ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய “விம்சமணி தீபிகை’(1878) நூலை செம்மைபடுத்தி தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கட்டபொம்மனைப்பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்
அதாவது எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.அத்தகைய தீயூழிலிருந்து பரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்.
புதிய கலாச்சாரம்
நவம்பர் 2006
ஆசிரியர் வி. வல்லபேசன்
puthiyakalacharam@rediffmail.com

No comments: