இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Sunday 6 May, 2007

புதுவையில் சங்கமித்த சுதந்திர நதிகள்

பாரதியார், ஸ்ரீ அரவிந்தரிடத்தில் ரிக் வேதம் கற்றுக் கொண்டார். அவர், சக்தி உபாஸனை பற்றியும் அரவிந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வேதரிஷிகளின் தோத்திரப் பாடல்களிலும் மற்ற சமஸ்கிருத இலக்கியங்களிலும் மகாகவி பாரதியார் திளைப்பதற்கு, ஸ்ரீ அரவிந்தர் வழிகாட்டினார்.
1908-ல் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்த முதல் இந்தியர் பாரதியார். மகாகவியைத் தொடர்ந்து, மண்டயம் சீனிவாஸாச்சாரியார், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர் போன்றவர்கள் புகலிடம் தேடி புதுவை வந்து சேர்ந்தார்கள்.
புதுவையில் பாரதியை ஆசிரியராகக் கொண்டு 'இந்தியா' வாரப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது. புதுவையிலிருந்த தேசபக்தர்கள் 'இந்தியா' இதழின் பிரதிகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் அனுப்பினார்கள். பத்திரிகையின் செல்வாக்கு அதிகரித்தது. இதைக்கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவில் நுழையாதபடி 'இந்தியா' பத்திரிகைக்குத் தடைவிதித்தது.
1910-ல் மார்ச் 12-ம் தேதியிட்ட இதழோடு பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகையும், மற்ற பத்திரிகைகளும் மூடும்படியாக ஆயிற்று.
பாரதி மனச்சோர்வு அடைந்திருந்த சமயத்தில் அவரை அடியோடு மனங்குலைந்து விடாதபடி காத்தது, ஸ்ரீ அரவிந்தரின் வருகை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அலிப்பூர் வெடிகுண்டு வழக்கிலிருந்து, அரவிந்தர் கௌரவமாக விடுதலை செய்யப்பட்டார். அரசியலிலிருந்து விலகி, யோக வாழ்க்கையைத் தொடங்க அவர் புதுவையைத் தேர்ந்தெடுத்தார்.
1910-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி எஸ்.எஸ்.துயூப்ளெக்ஸ் என்ற கப்பலில், விஜயகாந்தன் என்பவரோடு, அரவிந்தர் புதுவைக்கு வந்து சேர்ந்தார். புதுவைக்கு வந்த அரவிந்தரை, பாரதியாரும் சீனிவாஸாச்சாரியாரும் வரவேற்றார்கள். அரவிந்தரை கோமுட்டித் தெரு சங்கர செட்டியார் வீட்டில் தங்க வைத்தார்கள். அரவிந்தர், சங்கர செட்டியார் வீட்டில் ஆறுமாத காலம் அஞ்ஞாத வாசம் செய்தார். அதன் பிறகே, அரவிந்தர் புதுவையிலிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக பொது மக்களுக்குத் தெரிய வந்தது.
ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்திருப்பதை அறிந்த கே.வி.ஆர்.ஐயங்கார் தமிழ் இலக்கிய உலகில் பிற்காலத்தில் 'வ.ரா.' என்றழைக்கப்பட்ட வ.ராமஸ்வாமி ஐயங்காருடன் அவரைக் காண புதுவைக்கு வந்தார். வ.ரா. வரும் முன்பே அரவிந்தர் வ.ராவை தம் அகக் காட்சியில் கண்டார். அரவிந்தரை தரிசித்தபின், வ.ராமஸ்வாமி ஐயங்கார், அவருடனேயே தங்கி அவரது சிஷ்யராக மாறிவிட்டார்.
செட்டியார் வீட்டிலிருந்து 1912-ல், மாதா கோவில் தெருவிலிருந்த ஒரு ஓட்டு வீட்டிற்கு அரவிந்தர் குடிபுகுந்தார். வ.ரா.வும் அதே வீட்டில் வாசம் செய்தார்.
ஸ்ரீ அரவிந்தர் வெகுவெகு சிலருக்கே தன்னை வந்து பார்க்க அனுமதி தந்தார். பாரதியாரும், சீனிவாஸாச்சாரியாரும் மட்டுமே அவரை தினமும் பார்க்கக் கூடியவர்கள்.
பாரதியார் யோகி அரவிந்தரைப் பார்க்க, தினமும் ஏழு மணிக்குப் பிறகு தவறாமல் செல்வார். பாரதி அரவிந்தர் இல்லம் போகும்போது, முதலில் சீனிவாஸாச்சாரியார் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குப் போய் ஏழு மணிவரை இருந்துவிட்டு, கொஞ்சம் இருட்டிய பிறகே அரவிந்தர் இல்லம் செல்வது வழக்கம்.
இருட்டுவதற்காக பாரதியார் காத்திருந்தது, தான் அரவிந்தர் இல்லத்திற்குச் செல்வதை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக அல்ல. அரவிந்தர் இரவு சுமார் ஏழு மணிக்குப் பிறகே, தனது அறையை விட்டு வெளியே வந்து நண்பர்களை சந்திப்பது வழக்கம் என்ற காரணத்தால்.
தினமும் மாலை ஏழு மணியிலிருந்து எட்டரை ஒன்பது மணிவரை, பாரதி, வ.வே.சு.ஐயர், அரவிந்தர் மூவரும் இந்திய மேற்கத்திய இலக்கியம், தத்துவம், துறவு நிலை மற்றும் இந்திய அரசியல் குறித்து சுவாரஸ்யமாக விவாதிப்பார்கள். மண்டபம் ஸ்ரீனிவாஸாச்சாரியார் சிரத்தையுடன் இவர்களது உரையாடல்களை கேட்டுக் கொண்டிருப்பார்.
பாரதியார், ஸ்ரீ அரவிந்தரிடத்தில் ரிக் வேதம் கற்றுக் கொண்டார். அவர், சக்தி உபாஸனை பற்றியும் அரவிந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வேதரிஷிகளின் தோத்திரப் பாடல்களிலும் மற்ற சமஸ்கிருத இலக்கியங்களிலும் மகாகவி பாரதியார் திளைப்பதற்கு, ஸ்ரீ அரவிந்தர் வழிகாட்டினார். வேத ரிஷிகளின் கவிதை என்பது அவரது முதல் மொழிபெயர்ப்பு. இதனையடுத்து, பதஞ்சலியின் யோக சூத்திரத்தையும், பகவத் கீதையையும் பாரதியார் மொழி பெயர்த்தார். இன்றைக்கும் பாரதியின் கீதை மொழிபெயர்ப்பு ஒரு இணையற்ற படைப்பாகவே விளங்குகிறது. அரவிந்தரே, "பதஞ்சலியின் சமாதி பாதை என்ற நூலுக்கு பாரதி செய்த மொழிபெயர்ப்பு அருமையானது" என்று கூறியிருக்கிறார்.
ஸ்ரீ அரவிந்தரும், வ.வே.சு.ஐயரும் அளித்த ஊக்கத்தாலும், அறிவுரையாடல்களாலும், அபின் அருந்துவதை உதறியதாலும், பாரதியார் தீவிரமாக எழுதத் தொடங்கினார். 1910 முதல் 1913 வரையான காலத்தில் பாரதியார் தனது சிறப்புமிக்க படைப்புகளான, கனவு என்ற சுயசரிதை, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றைப் படைத்தார். கீதையை மொழி பெயர்த்தார்.
அரவிந்தர் தனது ஆப்த நண்பர்களான சீனிவாஸாச்சாரியார், வ.ரா., கே.வி.ஐயங்கார், பாரதியாருடன் இரவில் இருக்கும்போது 'ஆட்டோமெடிக் ரைட்டிங்' என்னும் ஆவி கொண்டெழுதும் வேலை சில நாட்களில் நடக்கும்.
இரவில் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் தகுதியுள்ள ஒருவர் பென்சிலும் காகிதமுமாக மேஜைக்கு முன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அமைதியில் ஆழ்ந்து இறந்து போனவர்களின் ஆவியை வரவழைப்பார்கள். அழைத்த ஆவியானது நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் மீது ஆவாகனமாகி அவர் கைகொண்டு, கூட இருப்பவர்களின் கேள்விகளுக்கு பதிலையோ, அல்லது விரும்பிய விஷயங்களையோ எழுதிச் செல்லும். யோச சாதனம் என்ற அரவிந்தரின் நூல் இவ்வகையில் எழுதப்பட்ட நூலாகும்.
ஸ்ரீ அரவிந்தர் மாதா கோவில் தெருவிலிருந்து பிரான்சுவா மர்த்தேன் வீதியிலுள்ள வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
மர்த்தேன் வீட்டு மேல்மாடியில் அரவிந்தரின் அறையிருந்தது. அன்னையின் வருகைக்காக மேல்மாடி கொஞ்சம் அலங்கரிக்கப்பட்டது. அதாவது இரவல் என்றாலும் திருப்பித் தரவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. ஒரு பழைய ஓட்டை மேஜை, இரண்டு கைப்பிடி வைத்த நாற்காலிகள், நாலைந்து கைப்பிடி இல்லாத மடிப்பு நாற்காலிகள் இவை ஏற்பாடாயின.
அரவிந்தரின் பணியும், சாதனையும் அன்னையின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தது. 1910-ம் ஆண்டில் அரவிந்தர் பால் ரிச்சர்டிடம் சொல்லியனுப்பியபடி 1914-ம் ஆண்டு மார்ச் மாதம் 'ஸ்ரீ அன்னை' என்று அனைவராலும் அறியப்படும் மி ரா ரிச்சர்டு என்ற இளம் பிரெஞ்சு பெண்மணி புதுவை வந்து சேர்ந்தார்.
பிரான்சுவா மர்த்தேன் வீதியிலுள்ள வீட்டில் வ.ரா. கீழ்தளத்தில் உள்ள அறையில் தங்கி இருந்தார்.
இந்தப் புது வீட்டில்தான் வ.ரா. சமஸ்கிருதம் படிக்க ஆரம்பித்தார். ஸ்ரீ நளினி காந்த குப்தா என்பவர்தான் இவருக்கு ஆசிரியர். அவரிடமே வங்க மொழியையும் வ.ரா. கற்றுக் கொண்டார். வங்காள மொழியில் எழுதப்பட்ட நாவல்களைப் படிக்கத் தொடங்கினார்.
பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஜோடி மோதிரங்களை'ப் படித்து மகிழ்ந்தார் வ.ரா. ஒரு நோட்டுப் புத்தகத்தில் பக்கம் பக்கமாக, அதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். இப்படி வ.ரா. எழுதிக் கொண்டிருக்கையில் ஒருநாள் பாரதி வந்துவிட்டார். வ.ரா.வின் நோட்டைப் பிடுங்கிக் கொண்டு படிக்கத் தொடங்கினார். அரவிந்தரை அழைத்தார். "பாபுஜி இந்த நோட்டுப் புத்தகத்தில் பங்கிம் பாபுவின் ஜோடி மோதிரங்களை நம்ம ராமஸ்வாமி ஐயங்கார் அற்புதமான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். வசனத்தில் இனி எனக்குக் கவலையில்லை. கவிதை எழுதினால் போதும். வசனத்திற்கு நம் ஐயங்கார் இருக்கிறார்" என்று அவரிடம் குதூகலித்தார்.
ஆனால், பாரதி பாராட்டிய வ.ரா.வின் ஜோடி மோதிரங்கள் மொழிபெயர்ப்பு பூர்த்தி ஆகவும் இல்லை. அந்த நோட்டுப் புத்தகமும் எங்கோ தொலைந்துவிட்டது. வ.ரா. தம் மொழி பெயர்ப்புகளை பாரதியாரிடம் காண்பித்த பிறகே அச்சுக்கு அனுப்புவார்.
வ.ரா. இந்தப் புதுவீட்டில் நீண்ட காலம் தங்கவில்லை. வ.ரா.விற்கு தன் தாயாரிடத்தில் அளவு கடந்த பிரியம். அவர் தன் தாயை விட்டுப் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. தன் தாயாரைப் பார்க்கப் போக வேண்டும் என்று அரவிந்தரிடம் அனுமதி கேட்டார். அரவிந்தர் இதற்கு எளிதில் இணங்கவில்லை. சொந்த ஊர் திரும்ப வேண்டாமென்று வ.ரா.வை எவ்வளவோ கேட்டுக் கொண்டார். வ.ரா. அதற்கு சம்மதிக்கவில்லை. ஒரே பிடிவாதமாய் 1914 மே மாதம், தனது சொந்த ஊரான திருப்பழனத்திற்கு வ.ரா. கிளம்பி விட்டார்.
பாரதியார் புதுவை வாசத்தின் கடைசி ஆண்டுகளில், தாங்க முடியாத வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார். புதுவை வாசம் சலித்துப் போய், 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதியார் இந்தியா திரும்பினார். 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை வந்து ராஜாஜி வீட்டில் காந்திஜியை சந்தித்தார்.
அந்த சந்திப்புப் பற்றி, வ.ரா.விற்கு நண்பனாகவும், பாரதிக்கும் அரவிந்தருக்கும் சிஷ்யராகவும் விளங்கிய அமிர்தா, இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"1919-ம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார், மகாத்மா காந்தியைத் தான் பார்க்கப் போவதாகவும் என்னைத் தன்னுடன் வரும்படியும் அழைத்தார். அப்போது காந்தி ராஜாஜி இல்லத்தில் தங்கி இருந்தார். மகாத்மா காந்தியைக் காண மக்கள் திரள் திரளாய் வந்து கொண்டிருந்தார்கள். சுப்பிரமணிய பாரதியாருடன் நானும் அங்கு வந்து சேர்ந்தேன்.
வேலியால் சூழப்பட்ட ஒரு பெரிய தோட்டத்தின் நடுவிலிருந்து அழகான பங்களாவில் ஒருவர் "ஷூ-பாலிஷ்" போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவரை அணுகி பாரதியார் வந்திருக்கும் விஷயத்தைத் தெரிவித்தேன்.
அவர் தலை நிமிர்ந்ததும் எனது உள்ளம் பூரித்தது. வ.ரா.வை அங்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டேன். கையிலிருந்த ஷ¨ஸ் முதலியவற்றைப் போட்டு விட்டு, வ.ரா. என்னை வாரி அணைத்துக் கொண்டார். சிறிது தொலைவில் பாரதியார் நான் கொண்டு வரும் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
வ.ரா. "ஏதடா தர்மசங்கடத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டாய். காந்திஜியைப் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல. முதலில் ராஜாஜியிடம் தெரிவிக்க வேண்டும். பிறகு அவர் காந்திஜியைக் கேட்டு நாள் குறிப்பிடுவார். இது உடனே நடக்கக் கூடிய காரியமல்ல" என்றார்.
இந்த பதிலை பாரதியாரிடம் தெரிவிக்க எனக்குத் தைரியமில்லை. பிறகு பாரதியை வணங்கிவிட்டு வ.ரா., "உள்ளே கூடத்தில் வந்து அமருங்கள். நீங்களே ராஜாஜியிடம் வந்து காரியத்தை நேரில் சொல்லலாம்" என்றார்.
பாரதியாரோ, "நான் தெய்வ ஆக்ஞை பெற்று காந்திஜியைக் காண வந்திருக்கிறேன். அவரை உடனே பார்க்க வேண்டும்" என்றார். பாரதியார் சொன்னதை ராஜாஜி கேட்டு பிரமித்து சிறிது தயங்கி, "பிறகு இதோ பதில் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே காந்தியைக் காண சென்றார்.
பாரதி காந்திஜியைப் பார்த்து திரும்பியது இரண்டு நிமிடங்கூட இருக்காது. பங்களாவில் அரைக் கணம் கூடத் தங்காது வ.ரா.விடம் விடையும் பெறாது என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே பங்களாவை விட்டு வெளியே பறந்து விட்டார் பாரதியார், வில்லை விட்டுக் கிளம்பிய அம்பைப் போல.
காந்திஜியுடன் என்ன நடந்தது என்று எனக்குச் சொல்ல யாருமே இல்லை. என்னன்னவோ வதந்தியெல்லாம் கிளம்பிற்று அவ்வளவுதான்!"
பாரதியார், வ.வே.சு.ஐயர், மற்றும் வ.ராமஸ்வாமி ஐயங்கார் புதுவையிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு சமயங்களில் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு மறுபடியும் வந்தார்கள்.
புதுவையில் ஒன்றாக சங்கமித்த நதிகள் மீண்டும் கிளை நதிகளாகப் பிரிந்து தங்களது வாழ்க்கைப் பயணத்தை தனித்தனியே தொடங்கின.
ஆனால் ஸ்ரீ அரவிந்தர் மட்டும் பாண்டிச்சேரியை விட்டு ஒரு அங்குலம் கூட எங்கும் நகரவில்லை.


No comments: